ஆக்ஷன் படமா நடிச்சு லவ் மறந்துருச்சு! - ஆர்யா கலகல | Arya 40 | Vettuvam
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ஆர்யா, ரஞ்சித் இயக்கும் ‘வேட்டுவம்’ படத்தில் அடிமுறையை மையமாகக் கொண்ட ஸ்போர்ட்ஸ் – சைன்ஸ் ஃபிக்ஷன் கலவையுடன் வித்தியாசமான உலகை உருவாக்கியிருப்பதாக கூறுகிறார். நல்ல வரவேற்பு கிடைத்தால் கிளைக்கதைகளாக தொடர்ச்சிப் படங்கள் வரும் வாய்ப்பும் உள்ளதாக அவர் நம்பிக்கை தெரிவிக்கிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆர்யா. அவர் நடிப்பில் மிஸ்டர் எக்ஸ் படம் ஏப்ரல் 17ம் தேதி வெளியாகவுள்ளது, இப்படத்துக்கான புரமோஷன் பேட்டி ஒன்றில் ஆர்யா அடுத்ததாக நடித்துவரும் படங்கள் பற்றிய அப்டேட்டை கொடுத்திருக்கிறார்.
இது பற்றி அவர் கூறுகையில் "வேட்டுவம் மிக சிறப்பாக வந்திருக்கிறது. ரஞ்சித் மிக சுவாரஸ்யமான நபர். சார்பட்டா செய்யும் போதே இப்படியான ஒரு ஸ்போர்ட்ஸ் உலகத்தை நாம் வடிவமைக்கலாம், இதனை இதுவரை யாரும் சொல்லவில்லை என உருவாக்கினார். அதே போல் வேட்டுவம் படத்திலும் வித்தியாசமான வாழ்க்கையை காட்ட இருக்கிறார். அடிமுறையை மையமாக வைத்து ஒரு ஸ்போர்ட், அதில் சைன்ஸ் ஃபிக்ஷன் கதை என சொல்லும் போதே மிக சுவாரஸ்யமான ஒரு கதை. இதை எல்லாம் எப்படி இணைப்பார் என்ற கேள்வி இருந்தது. ஆனால் அவற்றை எல்லாம் அழகாக ஒரு உலகத்துக்குள் கொண்டு வந்துவிட்டார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தால் இதிலிருந்து நிறைய கிளைக்கதைகளை படமாக செய்யலாம்.
இப்போது ஆர்யா 40 படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. அது `ராஜா ராணி' டைப் ரொமான்டிக் படம். படத்தில் ஹீரோயின்கள் இருந்தால் கூட சண்டை போடும் சூழல் ஆகிவிட்டது. ரொம்ப நாளாக சண்டை போடும் படங்களாக நடித்து டயர்டாக இருக்கிறது, இடையில் லவ் எப்படி இருக்கும் என்பதே மறந்து போய்விட்டது. அதனால் கொஞ்சம் லவ் பண்ணி பார்க்கலாம் என இந்தப் படம் செய்கிறேன். அதனால் ஆர்யா 40யில் இருண்டு ஹீரோயின்கள். 65 காட்சிகளும் ரெண்டு ஹீரோயின்களிடம் தான் பேச்சே, பசங்களுடன் பேசும் வேலையே இல்லை.
ஆக்ஷன், ரிவென்ஜ் என நடித்து நடித்து, அதிலிருந்தும் ஒரு இடைவேளை தேவைப்படுகிறது. கொஞ்சம் மென்மையான படங்களும் செய்யலாம் என இந்தப் படத்தை தேர்வு செய்தேன். வெறுமனே லவ் படம் என்று முடிவு செய்ததில்லை, படத்தின் கதை நன்றாக இருந்தது. அந்த இயக்குநர் நிகில் முரளி இதற்கு முன் மலையாளத்தில் Pranaya Vilasam என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இன்றைய காலகட்டத்தை பிரதிபலிக்கும் ஒரு அழகான காதல் கதை. மேலும் சந்தானத்துடன் இணைந்து ஒரு படம் நடிப்பதற்கான வேலைகளும் போய்கொண்டு இருக்கிறது. அதற்கான கதையை தேடி வருகிறோம்." என்றார்.

