”மக்கள் பிரச்னைகளைச் சொல்லும் படங்களில் நடிப்பேன்!” - யோகி பாபு | Yogi Babu | Kenatha Kanom
யோகிபாபு நடிப்பில் மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கிய, `கெணத்த காணோம்' படம் சமீபத்தில் வெளியானது. இப்படத்தின் நன்றி அறிவிப்பு விழா இன்று நடைபெற்றது. அந்த விழாவில் யோகிபாபு பேசிய போது, "இந்தப் படத்தைக் கொடுத்த என்னுடைய அருமைத் தம்பி சுரேஷ் சங்கையாவுக்கு நன்றி. இந்தப் படத்தை எடுத்துவிட்டு சுரேஷ் சங்கையா மறைந்துவிட்டான். எல்லோரும் ஆசைப்பட்டதுபோல இந்தப் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இயக்குநர் இல்லாமல் இந்தப் படத்தை வெளியே கொண்டுவர தயாரிப்பாளர் எவ்வளவு கஷ்டப்பட்டார் என, கூடவே இருந்து பார்த்திருக்கிறேன். அடிக்கடி போன் செய்தும் கேட்பேன். இப்போதுகூட அடுத்து இன்னொரு பட ஷூட்டிங் எனக்கு இருக்கிறது. அவர்களைக் காத்திருக்க வைத்துவிட்டு ஓர் அரைமணிநேரம் எல்லோரையும் பார்த்துவிட்டு வருகிறேன், இல்லை என்றால் தப்பாகிவிடும். இது என் படம் எனச் சொல்லிவிட்டுர்ஹ்தான் இங்கே வந்திருக்கிறேன்.
இந்தப் படம் பார்த்து நிறைய பேர் பாராட்டினார்கள். காமெடி படங்களே செய்கிறீர்கள். இதுபோல நல்ல படங்களும் பண்ணுங்க என்று சொன்னார்கள். கண்டிப்பாகச் செய்வேன், `அர்ஜூனன் பத்து' படத்துடன் 300 படம் ஆகிவிட்டது எனச் சொல்கிறார்கள். இந்த திரைத்துறையில் அமையும் காமெடி படங்களை நான் நடிப்பேன். முக்கியமாக, நம் மக்களின் பிரச்னைகளை என் மூலமாகச் சொல்ல வேண்டும் என ஆசைப்படுபவர்கள் கதையை எடுத்து வாருங்கள். சத்தியமாக நான் செய்கிறேன்" என்றார்.

