ஹைதராபாத் சார்மினார் இல்லை என்றால், விஜய்க்கு `கில்லி' இல்லை! | 22 Years of Ghilli | Vijay
விஜய் கேரியரில் மறக்கவே முடியாத அளவு புகழ்பெற்ற மற்றும் அவருடைய திரைப்பயணத்தையே மாற்றிய ஒரு படம் ’கில்லி’. ரீ ரிலீஸில்கூட பெரிய ஹிட்டாகும் அளவுக்கு அப்படத்திற்கு பெரிய ரசிகர் கூட்டம் உண்டு. இந்தப் படம் 2004 ஏப்ரல் 17ஆம் தேதி வெளியானது. அதாவது 22 வருடங்களுக்கு முன்பு இதே நாளில் வெளியானது கில்லி. இந்தப் படத்தின் துவக்கம், அது உருவான விதம், எவ்வளவு பெரிய ஹிட் என்பதெல்லாம் பலரும் அறிந்ததே. ஆனால் ஒரு கேயாஸ் தியரியபோல, ஹைதராபாத்தில் சார்மினார் கட்டப்படவில்லை என்றால், நமக்கு ’கில்லி’ என்ற ஒரு படம் கிடைத்திருக்காது என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? கில்லிக்கும், ஹைதராபாத்தில் புகழ்பெற்ற வரலாற்று நினைவுச் சின்னமான சார்மினாருக்கும் உள்ள தொடர்பு என்ன சுருக்கமாகப் பார்க்கலாம்.
இப்படம் தெலுங்கில் மகேஷ்பாபு நடிப்பில் குணசேகர் இயக்கிய `Okkadu' படத்தின் தமிழ் ரீமேக் என்பது உங்களில் பலருக்கு தெரிந்திருக்கலாம். அது குணசேகர், சிரஞ்சீவி நடிப்பில் Mrugaraju படம் கமிட்டாகி இருந்தார். ஷூட்டிங் செல்லும் முன்பு வைஜெயந்தி தயாரிப்பு நிறுவனத்தில் மகேஷ்பாபுவை சந்திக்கிறார் குணசேகர். அப்போது மகேஷ் ஹீரோவாக அறிமுகமாகி மூன்று படங்கள் வெளியாகிவிட்டது, நான்காவதாக `Murari' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மகேஷை பார்த்த மாத்திரத்திலேயே குணசேகருக்கு பிடித்துவிட அவருடன் படம் பண்ண விரும்புகிறார். எனவே இன்ஸ்டன்ட் காஃபி போல, இன்ஸ்டன்ட் ஒன்லைன் ஒன்றை சொல்கிறார்.
சார்மினார் பின்னணியில் ஒரு படம் செய்ய வேண்டும் என்ற விருப்பத்தில் இருந்த குணசேகர், அதையே கையில் கதையாக எடுக்கிறார். `உங்கள மாதிரி ஓர் இளைஞன் சார்மினார் மேல நைட்டு படுத்துக்கிட்டு சிகரெட் பிடிச்சிட்டு வானத்துல பிறை நிலா பாக்கறான்' இதுதான் படத்தின் அந்த இளைஞனின் குணம் எனச் சொல்ல, மகேஷ்பாபுவுக்கும் பிடித்துவிடுகிறது. அப்போது, அவ்வளவுதான் குணசேகருக்கும் கதை உருவாகி இருந்தது. `Mrugaraju' பட ஷூட்டிங் சமயத்தில் `Okkadu' கதையையும் எழுத ஆரம்பிக்கிறார். இதற்கு நாம் இன்னொரு நன்றி சொல்ல வேண்டியது ஷேக்ஸ்பியரின் Romeo and Juliet கதையைத் தழுவி Jerome Robbins உருவாக்கிய West Side Story என்ற நாடகத்துக்கு, அதனை மையப்படுத்தி அதேபெயரில் படமாக எடுத்த Robert Wise, Jerome Robbinsக்கும். West Side Storyயில் ஒரு நகரத்தில் இருக்கும் இரு குழுக்களுக்கு இடையேயான மோதல்தான் கதை. இந்த மாதிரி ஒரு கதை சார்மினார் ஏரியாவுக்குள் நடந்தால் எப்படி இருக்கும் என சிந்தித்து `Okkadu'வை எழுதுகிறார் குணசேகர்.
`Mrugaraju' கடைசி ஷெட்யூலின்போது Okkadu' கதை எழுதி முடிக்கவும் மகேஷ் பாபுவிடம் சொல்கிறார். அவருக்கும் ரொம்ப பிடித்துப் போகிறது. ஆனால், சார்மினாரில் படம்பிடிக்க அனுமதி கிடையாது, எனவே சார்மினாரையே செட் போட்டுத்தான் எடுக்க வேண்டும். என்ன செய்வது எனக் குழம்புகிறார்கள். எல்லோரும் கேட்டு `எவனாவது சார்மினாரையே செட்டா போடுவானா' எனக் கேட்டு கேலி செய்ய, ஒருவர் மட்டும் `பேசாம Ramoji Film Cityல ஒரு சார்மினாரையே காட்டிரலாம்' என குணசேகருக்கு ஷாக் கொடுக்கிறார். அவர்தான் Ramoji Rao. ஆனால் சில காரணங்களால் அவர் படத்திலிருந்து வெளியேற படம் எம்.எஸ். ரெட்டி கைக்குப் போகிறது. ஆனால், அந்தச் சமயத்தில் குணசேகர் சிரஞ்சீவி நடிப்பில் இயக்கி பொங்கல் வெளியீடாக வந்த `Mrugaraju' பெரிய ஃப்ளாப். எனவே ஒரு தோல்வி பட இயக்குநருக்கு இவ்வளோ பெரிய பட்ஜெட் எப்படி கொடுப்பது என எம்.எஸ்.ரெட்டி விலகுகிறார்.
பின்னர் வருகிறார் எம்.எஸ்.ராஜூ. அவர் தயாரித்த `Devi Putrudu' படமும் பெரிய ஃப்ளாப். சார்மினாரை செட் போட சம்மதிப்பவர் மட்டும்தான் இப்படத்தின் தயாரிப்பாளர் என உறுதியாக இருக்கிறார்கள் மகேஷ்பாபு - குணசேகர். எம்.எஸ்.ராஜூ கதையை கேட்டு சார்மினார் செட்டுக்கு ஓகே சொல்கிறார். குணசேகர் - எம்.எஸ்.ராஜூ இருவரும் ஹிட் கொடுப்பது என மகேஷ்பாபுவுடன் கைகோர்த்து இறங்குகிறார்கள்.
அப்படி துவங்கியதுதான் இந்த `Okkadu'. 2001இல் பொங்கலுக்கு குணசேகரின் Mrugaraju வெளியாகி ஃபிளாப் ஆனது. இரண்டு வருடங்கள் கழித்து அதே பொங்கலுக்கு குணசேகரின் Okkadu வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஹிட்டானது. எனவே ஒரு `கில்லி' உருவாக்க ஹைதராபாத் புதிய தலைநகரமாக உருவானதன் நினைவாகவும், அப்போது ஏற்பட்டிருந்த பெருந்தொற்றின் முடிவை குறிக்கும் விதமாக முகமது குலி குதுப் ஷாவால் கட்டப்பட்ட சார்மினார் எவ்வளவு முக்கியமாக இருந்தது என இப்போது புரிந்ததா?

