"ஷூட்-க்கு வரலைனா என்ன பண்ணுவனு கலாய்ப்பேன்.." - அர்ஜூன் | Arjun | Blast
அர்ஜூன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கியுள்ள படம் `ப்ளாஸ்ட்'. இப்படம் மே 28ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் அர்ஜூன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் உட்பட படக்குழுவினரும் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் பேசிய அர்ஜூன், " ‘BLAST’ நிஜமாகவே BLASTஆக இருக்கும். நான் எத்தனையோ ரோல் செய்திருந்தாலும் இந்த மாதிரி ஒரு ரோல் இப்போதுதான் முதன்முறையாக செய்கிறேன், ஒரு கராத்தே மாஸ்டராக. என்னுடைய இயக்குநருக்கு முதல் நன்றியைச் சொல்லிக் கொள்கிறேன். கதையில் எதையும் மாற்றவே விடமாட்டார். ஏதாவது கேட்டால் அவர் அழுதுவிடுவாரோ என்ற பயம் வரும். இது ஒரு ஜோக்தான். அவர் மிக தன்னம்பிக்கை மிகுந்த இயக்குநர். அவருக்கு என்ன வேண்டுமோ அதைச் சாதித்தே தீருவார்.
25 வருடத்திற்குப் பின் அபிராமியுடன் இணைந்து நடித்திருக்கிறேன். முதன்முதலில் அவரைச் சந்தித்தபோது மலையாளத்தில் மட்டும்தான் பேசுவார். உடைந்த தமிழ்தான் அவருக்குப் பேச வரும். இப்போது தமிழில் அசத்துகிறார். ஒரு நடிகையாக மிகவும் மேம்பட்டிருக்கிறார். இந்தப் படத்தில் கடினமாக உழைத்து நடித்திருக்கிறார். ப்ரீத்தி, நேரம் காலம் பார்க்காமல் உழைத்தார். அவர் நல்ல டான்சர் என தெரியும். ஆனால், சண்டையில் அசத்தி இருக்கிறார். என்னை ஓவர்டேக் செய்துவிடுவாரோ என்று ஆச்சர்யப்பட்டேன், பண்ணட்டும்.
இந்தப் படத்தின் உதவி இயக்குநர்கள் யாருக்கும் என்னைப் பிடிக்காது. ’ஷாட் ரெடி’ என வந்து அழைப்பார்கள். `வரலைனா என்ன பண்ணுவ போடா தெறிக்க' என ஜாலியாக கலாய்ப்பேன். முகத்தைச் சோகமாக வைத்துக் கொண்டு போவார்கள். ஆனால் நான் போகாமல் இருக்கமாட்டேன், பின்னாடியே போய்விடுவேன்.
ஆனால் இவர்களிடம் கேட்பேன், நீ இயக்குநர் ஆனால் எனக்கு சான்ஸ் கொடுக்க மாட்டாய்தானே’ என கிண்டல் செய்வேன். ஓர் இயக்குநருக்கு இணை இயக்குநர் என்பவர் பொண்டாட்டி மாதிரி. என்னதான் பிரச்னையாக இருந்தாலும், அதைச் சரி செய்யும்படி இணை இயக்குநர் பாஸ்கர் பணியாற்றுவார். எல்லோருக்கும் வாழ்த்துகள்" என்றார்.

