"மின்னல் முரளி பார்த்து வருத்தப்பட்டேன்!" - விஷ்ணு விஷால் | Vishnu Vishal | Aaryan
விஷ்ணு விஷால், செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ள படம் `ஆர்யன்'. இப்படம் அக்டோபர் 31 வெளியாகவுள்ளது. படத்தின் புரமோஷன் நிகழ்வுக்காக கேரளா சென்ற விஷ்ணு விஷால் அங்குள்ள செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.
அங்கு அவர் பேசிய போது "கேரளாவுக்கு வரும் போது எல்லாம் மகிழ்ச்சியாக உணர்வேன். என்னுடைய ராட்சசன் படத்திற்கு கேராளாவில் கிடைத்த வரவேற்பு பெரியது. ஆர்யன் எனக்கு முக்கியமான படம், என் மகனின் பெயர் ஆர்யன். எனவே என் மனதுக்கு நெருக்கமான படம். பொதுவாக ஒரு நடிகருக்கு அவரது மொழியில் அவரின் படம் வெற்றி பெறும்போது சந்தோஷமாக இருக்கும். பிறகு அவரது எல்லைகளை அதிகப்படுத்தும் போது, வெற்றிபெறும் முதல் படம் சந்தோசம் கொடுக்கும். அப்படித்தான் ராட்சசன் வெற்றி எனக்கு இருந்தது. இந்தப் படத்தை ராட்சசனுடன் ஒப்பிட வேண்டாம். ஒரு தனி படமாக பாருங்கள். இந்தப் படத்தை கேரளாவில் துல்கர் சல்மான் வெளியிடுகிறார். அவருடைய லோகா வெற்றியடைந்ததில் பெரிய மகிழ்ச்சி.
எனக்கு எப்போதும் ஒரு சூப்பர்ஹீரோ படம் நடிக்க வேண்டும் என்பது ஆசை. மின்னல் முரளி படம் வந்த போது எனக்கு மகிழ்ச்சியாகவும், வருத்தமாகவும் இருந்தது. நான் தென்னிந்திய சினிமாவில் ஒரு சூப்பர் ஹீரோ படம் பண்ண விரும்பினேன். படம் பார்த்ததும் டோவினோ, பேசிலை அழைத்து எனக்கு சந்தோசம், அதே நேரம் வருத்தம் என்றேன். படம் வெற்றியடைந்தது மகிழ்ச்சி. ஆனால் என்னால் செய்ய முடியாமல் போனது வருத்தம் என்றேன்." எனக் கூறினார்.

