“ `காக்கி சட்டை'யில் காமெடி சேர்த்திருக்கக் கூடாது!” - துரை செந்தில்குமார் | Durai Senthilkumar
துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜெண்ட் சரவணன் நடித்து வெளியாகியுள்ள படம் `லீடர்'. இப்படத்தின் புரமோஷனுக்காக பல பேட்டிகளைக் கொடுத்தார் துரை செந்தில்குமார். அதில் ஒரு பேட்டியில், ’இதற்கு முன்பு எடுத்த படங்களில் செய்த தவறுகளில் இருந்து கற்றுக் கொண்ட பாடங்கள் என்ன’ எனக் கேட்ட போது பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.
இதுபற்றி அவர் கூறியபோது, " `காக்கி சட்டை' படத்தில் இரண்டாம் பாதியில் மனோபாலா சார் பாத்திரத்தைச் சேர்த்ததில் எனக்கு திருப்தி இல்லை. நான் முதலில் தனுஷ் சாருக்கு ’காக்கி சட்டை’ கதையை எழுதியபோது மிகவும் சீரியஸான படமாக இருந்தது. ஆனால், சிவா உள்ளே வரும்போது அதற்குள் எண்டர்டெய்ன்மெண்ட் மிஸ் ஆகக்கூடாது எனப் பலரும் சொன்னார்கள். மேலும் அந்தச் சமயத்தில் ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ வெளியாகி மிகப்பெரிய ஹிட்டானது. எனவே, ’எதிர்நீச்சலுக்கு பிறகு அவருடன் படம் செய்யும்போது, எண்டர்டெயினிங்காக செய்ய வைத்துவிடுங்கள். சீரியஸாக செய்ய வைத்துவிடாதீர்கள்’ என்றனர். அதனை மாற்ற முயற்சித்தது எனக்கு பட ரிலீசுக்கு பிறகு சரியாகப்படவில்லை.
'கொடி' திரைப்படத்திற்குப் போகும்போது, முதலில் 35 நாள்கள் மட்டும் ஷூட் செய்துவிட்டு வந்துவிடுவோம். பிறகு க்ளைமாக்ஸை எழுதிவிட்டுத்தான் ஷுட்டுக்கு போவோம் என நினைத்தேன். ஆனால் தனுஷ் சார் முதல் நாளில் இருந்து 52 நாட்கள் எங்களுடன் பொள்ளாச்சியில் இருந்தார். அந்த நாட்களுக்குள் அவரின் இரட்டை வேட காட்சிகளுடன் எல்லாவற்றையும் எடுத்துவிட்டுத்தான் அனுப்பி வைத்தோம். ஏனென்றால் தாடி எல்லாம் வைத்திருந்தார், வேறு படங்களுக்கு அவரால் போக முடியாது என்ற சூழல். 'நான் அவைலபிளாக இருக்கிறேன். என்னை வைத்து முடித்துவிடுங்கள் செந்தில்' என தனுஷ் சார் சொன்னார்.
அவர் தரப்பில் தப்பு கிடையாது. நான்தான் க்ளைமாக்சில் கடைசி 20 நிமிடங்களை இன்னும் கொஞ்சம் சிறப்பாக எழுத வேண்டும், அதற்கு ஒரு கேப் கிடைக்கும் என நினைத்து இருந்துவிட்டேன். இனிமேல் அதை நான் திருத்திக்கொள்ள வேண்டும் என புரிந்து கொண்டேன். அதுபோல 'பட்டாஸ்' திரைப்படத்திலும் கமர்ஷியல் விஷயங்களுக்காக ஸ்கிரிப்டில் செய்த மாற்றங்களை செய்திருக்க வேண்டாம் என இப்போது தோன்றுகிறது" எனக் கூறியிருக்கிறார்.

