"தெலுங்கில் நானே டப்பிங் பேசினேன்; ஆனால்.." - பிரதீப் ரங்கநாதன் | Pradeep Ranganathan | LIK
பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள படம் `LIK'. இப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்திற்கான Pre-Release Event ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய பிரதீப் ரங்கநாதன், "நாம் இப்போது போனுடன் பேசும் அளவுக்கு தொழில்நுட்பம் சென்றுவிட்டது. நாம் இப்போது அனைத்துக் கேள்விகளையும் சாட்ஜிபிடியிடம்தான் கேட்கிறோம். எனக்கும், கேர்ள் ஃபிரெண்டுக்கும் சண்டை என்றால் யார் பக்கம் நியாயம் இருக்கிறது என்று கேட்கிறோம். அது கேர்ள் ஃபிரெண்டுக்கு ஆதரவாகப் பேசினால், எனக்கு ஏன் ஆதரவு தரவில்லை என கோபப்படுகிறோம். உடல்நலம் சரி இல்லை என்றால், என்ன மருந்து சாப்பிட வேண்டும் என்றுகூட கேட்கிறோம். இப்போதெல்லாம் நாம் மனிதர்களைவிட தொழிநுட்பங்களை நம்ப ஆரம்பித்துவிட்டோம்.
இணையத்தில் உள்ள தகவல்கள் சரிதான். ஆனால், சில சமயம் சாட்ஜிபிடிகூட தவறான தகவல்களை வழங்குகிறது. ஆனாலும் நாம் எதிரில் உள்ள மனிதரைவிட சாட்ஜிபிடியைதான் நம்புகிறோம். இப்போதே இப்படி என்றால் 2040இல் நிலைமை எப்படி இருக்கும்? மனிதர்களைவிட இயந்திரங்களை நம்புவோமா? நாம் யாரை திருமணம் செய்ய வேண்டும் என இயந்திரம் தீர்மானிக்கும். நாமும் இயந்திரம் சொல்வதுதான் சரியாக இருக்கும் என நம்புவோம்.
2040இல் ஒரு செயலி உங்களுக்கான துணையைத் தேர்வு செய்யும் என்றால், எப்படி இருக்கும் என்பதுதான் LIK. இணையத்தில் உங்களைப் பற்றிய தகவல்கள் இருக்கிறது. அதைப் பொறுத்து உங்களுக்கு விஷயங்கள் காட்டப்படுகின்றன. ஒருவேளை, எனக்கும் இன்னொரு பெண்ணுக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் பிடிக்கும் என்றால், நாங்கள் இருவரும் டேட் செய்யலாம் என அது பரிந்துரைக்கும். ஆனால் காதல் என்பது ஒரு டேட்டா சம்பந்தப்பட்டதா? இதைத்தான் இந்தப் படம் பேச இருக்கிறது.
இந்தப் படத்தின் தெலுங்கு டீசரை வெளியிட்டபோது, அதில் நானே தெலுங்கில் டப்பிங் பேசி இருந்தேன். விக்னேஷ் சிவன் சார் சொந்த குரலில் பேசச் சொன்னார். ஆனால், அதில் கமெண்ட்ஸ் எல்லாம், Good Try Please don't try again என வந்தது. அதை நான் எடுத்துக் கொண்டேன். படத்துக்கு எனக்கு எப்போதும் பேசும் வாசுதான் டப்பிங் பேசி இருக்கிறார்" என்றார்.

