” `ஜெய்ஹிந்த்'ல அந்த டயலாக் கவுண்டமணி சேர்த்தது!” - அர்ஜுன் சொன்ன ரகசியம் | Arjun | Goundamani
அர்ஜூன் இயக்கத்தில் நிரஞ்சன், ஐஸ்வர்யா அர்ஜூன் நடித்து சமீபத்தில் வெளியான படம் `சீதா பயணம்'. இப்படத்தின் புரமோஷனுக்காக பல பேட்டிகளை அளித்தார் அர்ஜூன். அப்படி ஒரு பேட்டியில் அவர் இயக்கிய படங்களில் காமெடி காட்சிகள் பற்றி கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அர்ஜூன், "ஆக்ஷனில் எனக்கு எவ்வளவு பெரிய பெயரெல்லாம் கிடைத்துள்ளது என்பது தனி விஷயம். ஆனால், அதற்கு சம அளவில் எனக்கு காமெடியும் பிடிக்கும். நான் இயக்கிய படங்கள் எல்லாவற்றிலும் காமெடியை நானேதான் எழுதியிருக்கிறேன். `ஜெய்ஹிந்த்', `தாயின் மணிக்கொடி' காமெடி எல்லாமே நான் எழுதியதுதான். அவற்றை இன்றும் ரசிக்கிறார்கள். காமெடிக்கு என தனியாக அமர்ந்து எழுதுவேன். காமெடியாக நடிப்பது என்பது மிகவும் கஷ்டமான விஷயம். அதனால்தான் காமெடியில் நடிப்பவர்கள் மீது எனக்கு பெரிய மரியாதை உண்டு. கவுண்டமணி, விவேக், வடிவேலு என அனைவருடனும் பணியாற்றி இருக்கிறேன் எல்லாமே சிறப்பாக வந்தது. சில நேரங்களில் நடிகர்கள், சில விஷயங்களைச் சேர்ப்பார்கள். அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். `ஜெய்ஹிந்த்' படத்தில் வில்லன் இடத்தைக் காட்டி, ’இதுதான் வில்லன் இடம்’ என நான் சொன்னதும், கவுண்டமணி சார் 'பாத்துச்சுல்ல வாங்க வீட்டுக்கு போலாம்' என்பார், அது ஸ்க்ரிப்டில் இல்லை. செட்டில் எல்லோரும் சிரித்துவிட்டார்கள். ஆனால், அந்த டேக்தான் சரி என நினைத்தேன். நான் சீரியஸாக இருக்க காரணம் இருக்கிறது. அதற்காக அவரும் ஏன் சீரியஸாக இருக்க வேண்டும். எனவே அந்த வசனத்தையும் சேர்த்து மறுபடி படமாக்கினேன்" என்றார்.

