’எதிலும் பங்கேற்காமல் வேடிக்கை பார்ப்பவரா? நீங்கள்..’ - பிரதீப் தந்த அட்வைஸ் | Pradeep Ranganathan
நடிகர் பிரதீப் ரங்கநாதன், தனியார் பல்கலைக்கழக நிகழ்வில் கலந்துகொண்டு, 'கூச்சப்படாமல் கேளுங்கள்' என அறிவுரை வழங்கினார். பள்ளி, கல்லூரி நாட்களில் போட்டிகளில் பங்கேற்காமல், வேடிக்கை பார்த்ததன் அனுபவத்தை பகிர்ந்து, 'ஒரு திருப்பம் வரும், அதுவரை சொகுசாக வேடிக்கை பார்ப்போம்' என்றார்.
தமிழ் சினிமாவில் முன்னணி இடத்தை நோக்கி நகர்ந்துவரும் நடிகர் பிரதீப் ரங்கநாதன். சமீபத்தில் தனியார் பல்கலைக்கழக நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட அவர் பேசிய போது "கல்ச்சுரல்ஸ் வரும் போதெல்லாம் என்னை பற்றி யோசிக்க ஆரம்பித்துவிடுவேன். ஏனென்றால் பள்ளி, கல்லூரியில் இருக்கும் போதெல்லாம் எந்த போட்டி நடந்தாலும், அதில் கலந்து கொள்ளாமல் வேடிக்கை மட்டுமே பார்க்கும் ஒருவன் இருப்பான், அது தான் நான். இங்கும் என் போன்ற ஆட்கள் இருக்கலாம். ஆனால் அதற்காக வருத்த பட தேவையில்லை. ஆடுவது 10, 20 பேர் தான், ஆனால் பார்க்கும் நாம் தான் அதிகம்.
நாம் ரசிப்பதற்காக தான் அவர்கள் ஆடுகிறார்கள். பார்க்க யாருமில்லாமல் என்ன பயன். நீங்கள் யாரும் இல்லை என்றால், நான் தனியாக நின்று பேசிக்கொண்டா இருப்பேன். நீங்கள் இருப்பதால் தான் பேசுகிறேன். நீங்கள் இல்லை என்றால் எங்களுக்கே மதிப்பில்லை. என்னடா இது நாம் வேடிக்கை மட்டும் பார்க்கிறோம் என நினைக்கிறீர்களா? ஒரு திருப்பம் வரும், அது மட்டும் வந்தால் உலகமே நம்மை வேடிக்கை பார்க்கும். அதுவரை நாம் சொகுசாக வேடிக்கை பார்ப்போம்." என்றார்.
வாழ்க்கையில் தன்னிடம் இருக்கும் குணத்தில் எதனை நினைத்து மகிழ்கிறீர்கள் எனக் கேட்கப்பட "எதுவாக இருந்தாலும் கூச்சப்படாமல் கேட்பது. நமக்கு ஒன்று தேவை என்றால் கூச்சப்படாமல் கேட்க வேண்டும். கேட்டு No என்ற பதில் வந்தால், எதுவும் ஆகப்போவது இல்லை. ஆனால் நாம் கேட்பதால், நடக்கவும் கூட ஒரு வாய்ப்பிருக்கிறதல்லவா. எனவே கேட்டுவிட வேண்டும்" என்றார் பிரதீப்.

