“இனி விஜயகாந்த்தைப்போல யாராலும் வரமுடியாது; வர நினைத்தால் மோசமான விளைவுதான்”-விஜய் குறித்து பிரேமலதா

அரசியலும் சினிமாவும் வேறுபட்டது; சினிமாத்துறையில் இருக்கும் யார் நினைத்தாலும் இனி விஜயகாந்த்தைப்போல வரமுடியாது; அவரைப்போல வர நினைப்பவர்களுக்கு மோசமான விளைவுதான் ஏற்படும் என விஜய் குறித்த கேள்விக்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா பதிலளித்துள்ளார்.
பிரேமலதா-விஜய்
பிரேமலதா-விஜய்Pt Desk

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. மொத்தம் உள்ள 77 மாவட்ட செயலாளர்களில் , 70-க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தின் இடையே பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மாவட்ட செயலாளர்கள் அனைவருக்கும் இன்று டிஜிட்டல் முறையிலான உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. விஜயகாந்த் சிறப்பாக, நல்லபடியாக இருக்கிறார். இந்த நேரலையை கூட அவர் பார்த்து கொண்டிருக்கிறார். மாவட்ட வாரியாக பொதுக்கூட்டம், மாநாடுகள் நடைபெற உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை விஜயகாந்த் அறிவிப்பார். தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்திற்கு எங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என அண்மையில் செய்தி பார்த்தேன். இந்த நிமிடம்வரை நாங்கள் யாருடனும் கூட்டணியில் இல்லை, எனவே தான் எங்களுக்கு அழைப்பு வரவில்லை. கூட்டணியிலேயே இல்லாதபோது எங்களுக்கு அழைப்பு இல்லை என்று எப்படி கூற முடியும்?; தமிழகத்திற்கு எதையுமே அதிமுக, திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் செய்யவில்லை.

ஊழல், கள்ளசாராயம் அதிகரித்துள்ளது, தமிழகம் போதைத் தமிழகமாக ஆகிவிட்டது. தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்ற வேண்டும். 'இந்தியா' என கூட்டணி பெயரை எதிர்க்கட்சிகள் மாற்றியுள்ளன. பெயர் மாறலாம். ஆனால், மக்கள் நிலையில் எந்த மாற்றமும் இல்லை. பலவிதமான முரண்பாடுகள் அந்த கட்சிகளுக்குள் இருக்கின்றன. தேர்தல் முடிவுகள் மூலம்தான் அவர்களை மக்கள் ஏற்பார்களா என்பது தெரியவரும். தண்ணீர் இல்லாமல் காவிரி பாசன பகுதிகள் வறண்டு விட்டன. வரும் நாட்களில் மேலும் மோசமாகும் நிலை உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக கூட்டணி குறித்து உறுதியான நல்ல முடிவை எடுக்கும். கட்சியின் வளர்ச்சி, எதிர்காலம் கருதி நல்ல முடிவை எடுப்பார் விஜயகாந்த். எங்களை பற்றி இல்லாத, பொல்லாத தகவலை பத்திரிகையில் எழுதுகின்றனர். நான் முதல்வரிடம் தொலைபேசியில் பேசியதாக வெளியான தகவல் தவறு. நாங்கள் மறைமுகமாக யாருடனும் பேச வேண்டிய அவசியம் இல்லை. மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசித்த பிறகே எந்த முடிவையும் எடுப்போம்.

தொகுதிவாரியாக புகார் பெட்டி வைக்கப்படும் என்று முதல்வர் கொடுத்த வாக்குறுதி என்னவாயிற்று?. ஆசிரியர் போராட்டத்தின்போது எங்கள் அலுவலகத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் பலர் இரவில் வந்து தங்கினர். அவர்களுக்கு பாதுகாப்பை நாங்கள் கொடுத்தோம். நம்பிவந்தவர்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுத்து, உணவளித்து அனுப்புவது விஜயகாந்த் வழக்கம். ஸ்டாலின் கர்நாடக சென்றபோது மக்கள் பிரச்சனையை பற்றி பேசவில்லை, பல ஆண்டு அமைச்சராக இருந்த துரைமுருகன் காவிரியில் உரிய நீரைக் கேட்டு கடிதம் கொடுத்தப்பிறகும் எந்த நடவடிக்கையும் இல்லை. கர்நாடக நம்மை ஏமாற்றுகிறது. அதிமுக, திமுக மாறி மாறி சோதனை நடத்துவது வழக்கம்தான். ஆனால் என்ன பறிமுதல் செய்தோம் என்பதை ஒருபோதும் வெளியிடமாட்டர். அமைச்சர் பொன்முடி தனது வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம் எங்கிருந்து வந்தது என்பதை தெரிவிக்க வேண்டும்.

ஆளுநர் ஆர்.என்.ரவி - முதல்வர் ஸ்டாலின்
ஆளுநர் ஆர்.என்.ரவி - முதல்வர் ஸ்டாலின்கோப்பு படம்

ஆளுநர் அவரது வேலையைத்தான் செய்கிறார், அவர் மீது பழிபோடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். லஞ்ச, ஊழல் புகாரில் கைது செய்யப்பட்டால் அமைச்சர் பதவியில் இருந்து அவர் விடுவிக்கப்பட வேண்டும், மொத்த திமுகவும் ஏன் செந்தில் பாலாஜிக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். ஏன் என்றால் அவரால் பலன் அடைந்துள்ளனர். செந்தில் பாலாஜிக்கு ஏன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்படவில்லை. அவர் அமைச்சராக தொடர்வது தவறான முன்னுதாரணம். காவிரியில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்யப்படவில்லை என்பதே மக்கள் கருத்தாக உள்ளது. காவிரி மருத்துவமனையில் வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

அனைத்து பெண்களுக்கும் ஆயிரம் வழங்க வேண்டும். அரசியல் வேறு, சினிமா வேறு; நடிகர் விஜய் மாணவர்களுக்கு உதவியது பாராட்டுக்குரியது. அவர் அரசியலுக்கு வருவாரா என்பது குறித்து அவர்தான் கூற வேண்டும். 40 ஆண்டு காலம் தன் வாழ்க்கையை பலருக்கும் முன்னுதாராணமாக வாழ்ந்தவர் விஜயகாந்த். இனி யார் நினைத்தாலும் அவரைப்போல யாராலும் வர முடியாது. எதையும் எதிர்பார்க்காமல் அனைவருக்கும் உதவியவர் விஜயகாந்த். அவரைப்போல மற்றவர்களும் வர நினைத்தால் மோசமான விளைவைத்தான் அது ஏற்படுத்தும்.

பிரதமர் உலக நாடுகளை சுற்றிவருவதில் எந்த பெருமையும் இல்லை, நம் நாட்டு பிரச்சனைக்கு, பாதிக்கப்பட்டோரை நேரில் சந்தித்து அவர் தீர்வு காண வேண்டும். பிரதமர் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்திக்க வேண்டும், விவசாயிகளை பிரதமர் சந்திப்பதில்லை; மக்களை சந்திக்காமல் உலக நாடுகளை பிரதமர் சுற்றுவதால் பயன் இல்லை. விஜயகாந்த் ஆலோசனைப்படி அடுத்த கட்டத்திற்கு கட்சியை எடுத்துசெல்லும் பணிகள் நடைபெற்று வருகிறது. தேமுதிக தலைமையில் தனி கூட்டணி அமைக்கும் எண்ணம் இல்லை. ஏதேனும் ஒரு கூட்டணியில் இடம்பெறுவோம்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக , மணிப்பூர் நிகழ்வு ஒட்டுமொத்த பெண் இனத்திற்கும் ஏற்பட்ட களங்கம் என்பதால் குற்றம் செய்தவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்; திமுக தேர்தல் அறிக்கையில் கூறியவாறு அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்; காவிரியில் உரிய நீரைப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com