ரஜினி சாரை மனதில் வைத்து எழுதிய கதையில் பிரதீப்! - `ட்யூட்' இயக்குநர் கீர்த்தீஸ்வரன் | Dude
பிரதீப் ரங்கநாதன் - மமிதா பைஜூ நடிப்பில் உருவாகியுள்ள படம் `ட்யூட்'. இப்படம் தீபாவளி வெளியீடாக அக்டோபர் 17ஆம் தேதி வெளியாகவுள்ளது. சாய் அப்யங்கர் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே பெரிய ஹிட்டாகி படத்தின் மீது எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த கீர்த்தீஸ்வரன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
`ட்யூட்' படம் பற்றி கீர்த்தீஸ்வரன் கூறும் போது " 'ட்யூட்' படத்தின் கதை எழுதத் தொடங்கியபோதே ரஜினி சாருக்கு 30 வயதிருந்தால் எப்படி இந்தக் கதையில் நடித்திருப்பார் என மனதில் வைத்துதான் எழுதினேன். அதில் பிரதீப் ரங்கநாதன் பொருந்திப் போயிருக்கிறார். இந்தப் படத்திற்கு மமிதாவை நான் சொன்னபோது அவரின் 'பிரேமலு' படம் கூட வெளியாகியிருக்கவில்லை. 'சூப்பர் சரண்யா' படம் பார்த்துதான் அவரை தேர்ந்தெடுத்தோம். மமிதா கதைக்குள்ளே வந்தவுடன் 'ரஜினி- ஸ்ரீதேவி' இணைந்து நடித்தால் எப்படி இருக்குமோ அப்படி படம் வந்திருக்கிறது எனத் தோன்றுகிறது.
படத்தில் பிரதீப்- மமிதா இருவரும் ஒரு ஈவண்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனி வைத்து நடத்துவார்கள். லவ் சப்ஜெக்ட் மட்டுமல்லாது கதையில் ஒரு மாஸ் இருக்கும். அது படம் பார்க்கும்போது உங்களுக்கு புரியும். இயக்குநர், கதாநாயகன், கதாநாயகி, இசையமைப்பாளர் என அனைவரும் இளம் தலைமுறையினர் என்பதால் இது ஜென் ஸீ படமா என பலர் கேட்கின்றனர். இந்தக் காலத்து இளைஞர்களும் குடும்ப பார்வையாளர்களும் பார்த்து கொண்டாடும் வகையில் எண்டர்டெயின்மெண்ட்டாக படம் இருக்கும். பிரதீப், மமிதாவுடன் நடிகர்கள் சரத்குமார், ரோகிணி, பரிதாபங்கள் புகழ் டிராவிட் ஆகியோரும் நடித்துள்ளனர். பிரதீப் படத்தில் வழக்கமாக நீங்கள் எதிர்பார்க்கும் எல்லா விஷயங்களும் இதில் இருக்கும்" என பகிர்ந்துள்ளார்.