முதன்முறையாக இரட்டை வேடங்களில் அதர்வா! | Atharvaa | Valai
தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களில் ஒருவர் அதர்வா. `பாணா காத்தாடி' படம் மூலம் அறிமுகமானவர் `பராசக்தி' வரை பல படங்களில் நடித்துவிட்டார். இப்போது முதன்முறையாக அவர் இரட்டை வேடத்தில் நடித்துள்ள படம் தயாராகியுள்ளது. `நான்', `அமர காவியம்', `எமன்' படங்களை இயக்கிய ஜீவா சங்கர் இப்படத்தை இயக்கியுள்ளார்.
திரையுலகில் அறிமுகமாகி 16 ஆண்டுகள் கடந்துவிட்ட அதர்வா, முதன்முறையாக `வலை' படத்தில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். திரைப்படம் குறித்து இயக்குநர் ஜீவா சங்கர் கூறுகையில், “ராமேஸ்வரத்தை கதைக்களமாகக் கொண்ட இந்த திரைப்படம் சரா மற்றும் குட்டி என இரண்டு கதாபாத்திரங்களைச் சுற்றி நகர்கிறது. இந்த இரண்டு கதாபாத்திரங்களிலும் அதர்வா முரளி நடித்துள்ளார். முழுக்க முழுக்க மீனவர் சமூகத்தின் வாழ்க்கை முறையை பேசும் படமாக இல்லாமல், பழிவாங்கல் கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. ரூபா மஞ்சரி மற்றும் வாணி போஜன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதற்கு முன்பு ராமேஸ்வரம் பின்னணியில் பல படங்கள் எடுக்கப்பட்டிருந்தாலும் பார்வையாளர்களுக்கு இந்தத் திரைப்படம் புதிய மற்றும் வித்தியாசமான அனுபவமாக இருக்கும்” என்றார். தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

