"சின்ன பையனா பார்த்த துருவ், இப்போ பைசன்ல..." - அமீர் சொன்ன ஃப்ளாஷ்பேக் | Ameer | Bison | Dhruv
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ், அனுபமா, ரஜிஷா, பசுபதி எனப் பலரும் நடித்து உருவாகி இருக்கிறது `பைசன்'. தீபாவளி வெளியீடாக அக்டோபர் 17ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. இதன் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
இதில் அமீர் பேசிய போது "இரஞ்சித், மாரி இருவருடன் எனக்கு பெரிய பழக்கமில்லை. ஆனால் இவர்களுடைய வரவை ஆதரித்து கொண்டாடியதில் ஒருவன் நான். அவர்களின் வெற்றியை என்னுடைய வெற்றியாக பார்த்தேன். அப்படி இருக்கும் போது இரஞ்சித் ஒருமுறை எனக்கு போன் செய்தார். அவருடைய தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் எனக் கேட்டார். அவருடைய உதவி இயக்குநர் வந்து கதை சொன்னார். நான் அதில் நடிக்கவில்லை. அந்தப் படம்தான் தண்டகாரண்யம். படம் துவங்க கொஞ்சம் தாமதம் ஆனது, என்னுடைய பட வேலைகள் துவங்கியதால் அதில் நடிக்க முடியவில்லை. அதே இரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் வந்து என்னை நடிக்க அழைத்தார். ராமின் உதவியாளராக பார்த்த மாரி செல்வராஜ், முதல் படத்திலேயே தான் யார் என்பதை அழுத்தமாக காட்டினார்.
மாரி கேட்கும்போது அவர் கதையில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்தது. அவர் போன்ற இயக்குநர்கள் தமிழ் சினிமாவில் முக்கியம் என அடிக்கடி கூறி இருக்கிறேன். படத்தின் கதையை என்னிடம் கூறினார், பின்பு சில மாற்றங்கள் செய்து மீண்டும் கூறினார். ஆனால் எனக்கு எதுவுமே ஞாபகம் இல்லை. படப்பிடிப்பில் அவர் காட்சிகளை சொல்லும் போது ஞாபகம் இருப்பதை போல கேட்டுக் கொள்வேன். வடசென்னை வெற்றி எப்படி வெற்றிமாறனை சேருமோ, அதை போல் இந்த பாண்டிய ராஜன் கதாபாத்திரத்துக்கு எது கிடைத்தாலும் அது மாரியை சேரும்.
துருவை 99லிருந்தே தெரியும். சினிமா எவ்வளவு விசித்திரமானது என்பது இந்த மேடையில் உணருகிறேன். அவரின் அப்பாவும் நானும் மிக நெருங்கிய நண்பர்கள். அவருடைய உழைப்பு சேது படத்தில் என்ன என்று அருகில் இருந்து பார்த்தவன் நான். அப்போதெல்லாம் துருவ் சின்ன பையன். எதையாவது கேட்டு அடம் பிடிப்பார், நான் அவரை கடைக்கு அழைத்து செல்வேன். இப்போது பைசனில் அவரை பார்த்த போது, சேதுவில் விக்ரமை எப்படி பார்த்தேனோ அது போல இருந்தார். விக்ரம் பல அவமானங்கள் கடந்து வந்தவர். யார் அவரை அவமானப்படுத்தியது, இன்று அவர்கள் என்னவாக இருக்கிறார்கள் என்பது எல்லாம் எனக்கு தெரியும். அவரது உழைப்பை பார்த்து நீங்கள் கடைசி வரை சினிமாவில் இருப்பீர்கள் எனக் கூறினேன். அந்த வெறியை இப்போது துவருவிடமும் பார்க்கிறேன். விக்ரமுக்கு பிதாமகனில் கிடைத்தது துருவுக்கு இதில் கிடைத்துவிட்டது.
பசுபதி சாருக்கும் எனக்கும் ஒரு உறவு உண்டு. அது என்ன என அவருக்கு தெரியாது. பருத்திவீரன் படத்தில் சித்தப்பு கதாபாத்திரம் எழுதும் போது அதை பசுபதி சாரை மனதில் வைத்து எழுதினேன். ஆனால் அவரை அப்போது என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை. மாரியின் திரைப்பயணத்தில் பைசன் இன்னும் ஒரு மகுடமாக மாற வாழ்த்துக்கள்" என்றார்.