நடிகர் விஷால்
நடிகர் விஷால்புதிய தலைமுறை

“சில பொறுக்கிகள் கேட்க மாட்டார்கள் என்பதால் பெண்கள் தற்காப்பு கலை கற்றுக்கொள்ள வேண்டும்” - விஷால்

சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோவிலுக்கு நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளருமான விஷால் இன்று சாமி தரிசனம் செய்தார்.
Published on

சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோவிலுக்கு நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளருமான விஷால் இன்று சாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்திதார்.

அப்போது பேசிய அவர், “கோவிலுக்கு வந்தால் நேர்மறையான எண்ணம் கிடைக்கும். அதுவும் இங்குள்ள அம்மனை தரிசிக்கும் பொழுது நேர்மறையான எண்ணம் உள்ளுக்குள் செல்வது போல் இருக்கும். மனதில் உள்ள பாரம் குறைவது போல் தோன்றும். ஏழை பெண் குழந்தைகளின் படிப்பு வசதிக்காக இன்று அம்மனை தரிசித்தேன்” என்றார்.

நடிகர் விஷால்
நடிகர் விஷால்

தொடர்ந்து அவர் உடல்நலன் குறித்து பரவும் தகவல்கள் குறித்து பேசுகையில், “என் ஆரோக்கியம் பற்றி ஒருவரிடம் கேட்கிறார்கள். அவர் டாக்டரா கம்பவுண்டரா என்று கூட தெரியவில்லை... அவரிடம் கேட்கிறார்கள். அடுத்தவர்களை பற்றி பேசுவது அநாகரீகம். ஒரு நடிகரின் படத்தை பற்றி பேசலாம். ஆனால் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பேசக்கூடாது. இப்படி பேசுவோர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

சினிமாவில் சிறு படங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த விஷால், “கடந்த வாரம் மட்டும் 6 சின்ன படங்கள் வெளியாகி உள்ளன. ஆனால் அவற்றில் எத்தனை படங்கள் வியாபார ரீதியாக வெற்றியடைந்தன என பாருங்கள். அதனால்தான் சொல்கிறேன்... சின்ன படங்களை எடுப்பவர்கள் ஆலோசனை கேட்டு உள்ளே வாருங்கள். தயாரிப்பாளர்கள் கவுன்சில், வழிகாட்டுதலை வழங்க ஏற்பாடு செய்யலாம். சிறிய படங்களை வெளியிடுவதில் பல சிரமங்கள் உள்ளன என்பதை புரிந்து, செயல்பட வேண்டும்” என்றார்.

நடிகர் விஷால்
நடிகர் விஷால்

பெண்கள் பாதுகாப்பு குறித்த கேள்விக்கு, “தற்காப்பு என்பது மிக முக்கியம். சில பொறுக்கிகள் யார் சொன்னாலும் கேட்கமாட்டார்கள். பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும். பள்ளி முடிந்து கல்லூரிக்கு செல்லும் முன்பே பெண்கள் தற்காப்புக்கலையை கற்றுத்தேர வேண்டும்” என்றார்.

நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்விக்கு, “அரசியல் பயணம் குறித்து நவம்பர் டிசம்பர் மாதத்தில் சொல்கிறேன். ஆனால் நான் வரக்கூடாது என நினைக்கிறேன். இன்னொரு கட்சி, இன்னொரு கொடி, இன்னொருத்தர் என இருக்க வேண்டாமே. அரசியல் வாதிகள் சரியாக இருந்தால், நாங்கள் எங்கள் தொழிலை பார்ப்போம்.

சுதந்திரம் கிடைத்து 75 வருடங்களுக்குப் பின்னும் இன்றும் பல கிராமங்கள் தண்ணீர் இல்லாமல், மின்சாரம் கிடைக்காமல், மருத்துவ வசதி இல்லாமல் உள்ளது. படப்பிடிப்புக்கு போகும்போது அந்த மக்கள் எங்களிடம் கோரிக்கை வைப்பதை கேட்கையில், தர்மசங்கடமாக இருக்கிறது. அரசாங்கம்தான் இதையெல்லாம் செய்யவேண்டும். அப்படி செய்தால், நாங்கள் எங்கள் தொழிலை பார்ப்போம்” என தெரிவித்தார்.

நாளை நடக்கும் மத்திய பட்ஜெட்டில் சினிமா துறையின் எதிர்பார்ப்புக்கு பற்றிய கேள்விக்கு, “திரைத்துறையையும், சூதாட்டத்தையும் சேர்த்து ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது, இது வருத்தமாக உள்ளது. அதனை மத்திய பட்ஜெட்டில் ரத்து செய்ய வேண்டும். இந்தியாவிலேயே தமிழ் திரைத்துறைக்கு மட்டுமே இரட்டை வரி விதிக்கப்படுகிறது. 18 சதவீதம் ஜிஎஸ்டி, 8 சதவீதம் உள்ளாட்சி வரியும் விதிக்கப்படுகிறது. மத்திய பட்ஜெட்டில் சினிமா துறைக்கு நல்லது அறிவித்தால் பஸ் பிடிச்சு வந்தாவது நிதியமைச்சருக்கு நன்றி சொல்வோம்” என நடிகர் விஷால் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com