நடிகர் விஜய்
நடிகர் விஜய்புதிய தலைமுறை

ஆட்டத்தில் அரசன்.. ஆக்ஷனில் அசுரன்.. தமிழ் சினிமாவின் தளபதி விஜய்க்கு இன்று 50-வது பிறந்தநாள்!

50 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்.
Published on

செய்தியாளர் - புனிதா பாலாஜி

எத்தனை ஹிட் படங்களை கொடுத்தாலும், அத்தனை எளிதாக மக்கள் இதயங்களில் இடம் பிடித்துவிட முடியாது. ஆனால், மனதைக் கவரும் அந்த மாய வித்தையை அறிந்தவர் நடிகர் விஜய்.

தன் ரசிகர்களின் மனதில் கோட்டை கட்டி, அன்பின் ஆட்சியை செய்து கொண்டிருக்கும் விஜய், இன்று தன் 50-அவது அகவையில் அடியெடுத்து வைத்துள்ளார். என் நெஞ்சில் குடியிருக்கும், எனத் தொடங்கும் ஒற்றை வரியில் ஓராயிரம் இதயங்கள் ஆர்ப்பரிக்கும்... திரையில் தோன்றும் முதல் காட்சிக்கு, ஒட்டு மொத்த திரையரங்கமே அதிரத் தொடங்கும்.

இவர் பஞ்ச் வசனம் பேசினால் விசில் பறக்கும்... பாட்டுக்கு ஆடினால் கைதட்டல் சத்தம் விண்ணை பிளக்கும்... இப்படி, இன்னும் பல சிறப்புகளுக்கு சொந்தக்காரர்... ரசிகர் நெஞ்சங்களின் அதிபதி... தமிழ் சினிமாவின் தளபதி விஜய். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இந்த திரை நட்சத்திரம், சினிமாவின் விடிவெள்ளியாக மங்காமல் ஒளிவீசிக் கொண்டிருக்கிறது.

நாளைய தீர்ப்பு படத்தில் தன் திரைப்பயணத்தை தொடங்கிய விஜய், தன் ரசிகர்களின் குடும்பங்களுக்கு வாரிசாகியிருக்கிறார். 30 வருட திரை அனுபவத்தில் முன்னும் பின்னுமாய் பல நெருக்கடிகளைக் கடந்து, சினிமாவில் வெற்றிக் கொடி நாட்டி, நாயகனாக உயர்ந்து நிற்கிறார், விஜய்.

இயக்குநரான தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரின் அரவணைப்பில் திரைக்களம் புகுந்தாலும், அவர் அரியணையில் ஏறியிருப்பதற்கு உழைப்பே பிரதான காரணம். அதுதான் இன்று அவருக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் புகழுக்கும், அன்புக்கும் காரணமாகியிருக்கிறது.. திரைப்பின்புலம் இருந்தாலும் வெற்றிகள் அனைத்தும் அவருக்கு அத்தனை எளிதாக கிடைத்துவிடவில்லை.

தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்ட விஜய், தன்னைத் தானே நுட்பமாக செதுக்கிக் கொண்டார்... நடிப்பு வரவில்லை என விமர்சிக்கப்பட்டதால், கைதேர்ந்த நடிப்பை கொடுக்க கற்றுக் கொண்டார். ஆட்டம் வரவில்லை என்று அலட்சியம் செய்யப்பட்டதால், நடனம் பயின்று நல்ல பாடல்களைக் கொடுத்தார். ஆனால், வெற்றிக்கான போராட்டத்தை மட்டும் அவர் கைவிடவே இல்லை. அந்த போர்க்குணம்தான் இன்றும் அவருக்கு கைகொடுத்துக் கொண்டிருக்கிறது.

விஜய் ஒரு பன்முகத் திறன் கொண்ட கலைஞன். காதல் செய்யும் ரொமான்ஸ் நாயகன், குறும்பு செய்யும் ஹீரோ, நடனத்தில் ஈர்க்கும் டான்ஸர், குரலால் அசத்தும் பாடகராக மட்டுமின்றி ஆக்ஷன், சென்டிமென்ட் என அனைத்து ஏரியாக்களிலும் சொல்லி அடிக்கும் கில்லியாக திகழ்கிறார், விஜய்.

ஒரு மாஸ் ஹீரோவுக்கான அத்தனை அம்சங்களையும் ஒரு சேர கொண்டிருப்பதால்தான், சுட்டிக் குழந்தைகள் முதல் பாட்டி வரை, தலைமுறைகள் கடந்த ரசிகர் கூட்டத்தைக் கொண்டிருக்கிறார். கடந்த காலத்தில் சந்தித்த வெற்றி தோல்விகளில் இருந்து அனுபவத்தை கூர்தீட்டிக் கொண்ட விஜய், இப்போது அரசியலை நோக்கி நகர்ந்திருக்கிறார்.

தேர்தல் அரசியலுக்கான தேடலை தொடங்கியிருக்கும் விஜய், அதற்கான கள செயல்பாடுகளிலும் தீவிரம் காண்பிக்கத் தொடங்கியிருக்கிறார். சினிமாவில் நாளைய தீர்ப்பு தந்த தொடக்கத்தினூடே, சாமானியர்களின் தீர்ப்புக்கான நாளை நோக்கிய பயணத்தை தீவிரப்படுத்தியிருக்கிறார், விஜய்... அந்த பயணத்தில் வெற்றியின் இலக்கை தொட வேண்டுமென்பதே ரசிகர்களின் விருப்பம்...!

நடிகர் விஜய்
’2K + 90ஸ் கிட்ஸ்’ எல்லாரும் காலி.. ‘மாலை டும்டும்’ பாடலுக்கு பின் கலக்கும் ‘கல்யாண கச்சேரி’ பாடல்!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com