இதெல்லாம் ஒரு பேச்சா? டாப்ஸியை வறுக்கும் டிவிட்டர்வாசிகள்
பிரபல இயக்குனர் பற்றி மோசமாக கருத்து தெரிவித்ததாகக் கூறி நடிகை டாப்ஸியை டிவிட்டர்வாசிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
தெலுங்கு இயக்குனர் ராகவேந்திர ராவ் இயக்கிய 'ஜும்மாண்டி நாதம்' என்ற படம் மூலம் ஹீரோயின் ஆனார் டாப்ஸி. தெலுங்கை அடுத்து தமிழ், இந்தி படங்களில் நடிக்கத் துவங்கினார். இப்போது இவர் இந்தியில் நடித்த ’பிங்க்’, ’நாம் ஷபானா’ படங்கள் ஹிட்டாகின. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட படங்கள் இவை. இந்நிலையில் டாப்ஸி தென்னிந்திய சினிமா பற்றி சொன்ன கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அவர் கூறும்போது, ’கிளாமர் கேரக்டர்களில் மட்டுமே என்னால் நடிக்க முடியும் என்று தென்னிந்திய சினிமாவில் நினைக்கிறார்கள். பிங்க் மற்றும் நாம் ஷபானா படங்களை பார்த்த பிறகே, ’ஓ. இந்த பொண்ணுக்கு நடிக்கத் தெரியும்’ என்று புரிந்து கொண்டனர். அங்கு தொப்புள் மீது அதிக ஆர்வம் காட்டுவது எனக்கு முன்பே தெரிந்திருந்தால் அதை அழகாக்கிவிட்டு சென்றிருப்பேன். ஆனால் தெரியாமல் போய்விட்டது. என் முதல் படத்தில், பாடல் காட்சியைதான் முதலில் படமாக்கினார்கள். என்னை அறிமுகப்படுத்தி வைத்த இயக்குனர், ஹீரோயின் இடுப்பில் பழம், பூக்களை வீசுவதற்கு பெயர் பெற்றவர். என் இடுப்பில் தேங்காயை வீசினார்கள். தேங்காயை இடுப்பில் போடுவது எப்படி கவர்ச்சியாகும்? என்று கூறியிருந்தார்.
இதற்கு டிவிட்டர்வாசிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ‘சினிமாவில் அறிமுகமாகும் போது எப்படி வேண்டுமானாலும் நடித்துவிட்டு வளர்ந்த பிறகு இப்படி பேசுவது நன்றாகவா இருக்கிறது’ என்ற ஒரு ரசிகர் கேட்டுள்ளார்.
‘உங்கள் பாதையை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். யாரும் உங்களை கட்டாயப்படுத்தவில்லை. மற்றவர்களை ஏன் குற்றம் சொல்கிறீர்கள் என்றுதான் புரியவில்லை’ என்று ஒருவர் தெரிவித்துள்ளார். இதே போல இன்னும் பலர் கடுமையாக டாப்ஸியை விமர்சித்துள்ளனர்.