நடிகர் சூர்யா, விரைவில் கே.வி ஆனந்த் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் தனி அடையாளத்தை பெற்றவர் நடிகர் சூர்யா. இவர் நடித்துள்ள ’தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படம் பொங்கல் அன்று வெளியாகயுள்ளது. இந்தப் படத்திற்கு பிறகு, சூர்யாவின் 36 ஆவது படத்தை இயக்குநர் செல்வராகவன் இயக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதற்காக பூஜை புத்தாண்டு அன்று போடப்பட்டது. செல்வராகவன் உடன் முதன்முறையாக இணைகிறார் சூர்யா. ஆகவே இந்தப் படம் குறித்து ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதனை தொடர்ந்து இந்தப் படத்தில் சூர்யாவின் ஜோடியாக நடிகை சாய் பல்லவி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக படத் தயாரிப்பு நிறுவனமான ட்ரீம்ஸ் வாரியர் பிக்சர் அறிவித்திருந்தது.
இந்நிலையில், சூர்யாவின் 37 ஆவது திரைப்படத்தை கே.வி ஆனந்த் இயக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளியான அயன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் மாற்றான் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை. இந்நிலையில் இக்கூட்டணி மீண்டும் இணைய இருப்பதாக சினிமா வட்டாரங்களில் தகவல் வெளிவர தொடங்கியுள்ளது. இருப்பினும் இதுக் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. முறையான அறிவிப்பு வந்த பின்னரே மற்ற விபரங்கள் குறித்து தெரிய வரும்.