சண்டைப் பயிற்சியாளர் மரணம்.. பா.ரஞ்சித் மீது வழக்குப்பதிவு!
’வேட்டுவம்’ திரைப்படப் படப்பிடிப்பு நாகை மாவட்டம் விழுந்தமாவடி கிராமத்தில் நடைபெற்றது. அப்போது சண்டைப் பயிற்சியாளர் மோகன்ராஜ் காரில் இருந்து குதித்தபோது தவறி விழுந்ததில் நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட மோகன்ராஜை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். படப்பிடிப்பில் மோகன்ராஜ் பங்கேற்ற சண்டை காட்சிகள் வெளியான நிலையில், இது தொடர்பாக அலட்சியமாக செயல்பட்டது உட்பட 3 பிரிவுகளில் பா.ரஞ்சித், ராஜ்கமல், வினோத், பிரபாகரன் ஆகியோர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே, உயிரிழந்த சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜின் உடலுக்கு, சென்னையில் உள்ள திரைப்படம் ஸ்டண்ட் இயக்குநர்கள் சங்கத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. பிரேதப் பரிசோதனைக்குப்பின் சென்னை வடபழனியில் உள்ள சங்க அலுவலகத்துக்கு அவரின் உடல் கொண்டுவரப்பட்டது. அங்கு சக கலைஞர்கள் மற்றும் நண்பர்கள் அவரின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். விபத்துகளில் உயிரிழக்கும் ஸ்டண்ட் கலைஞர்களின் குடும்பங்களுக்கு, மத்திய, மாநில அரசுகள் நிவாரணம் வழங்க வேண்டும் என, தென்னிந்திய திரைப்பட ஊழியர்கள் கூட்டமைப்பின் தலைவர், ஆர்.கே.செல்வமணி வலியுறுத்தியுள்ளார்.