அமரன் விவகாரம்
அமரன் விவகாரம்புதிய தலைமுறை

அமரன் படத்தில் மாணவரின் மொபைல் எண் நீக்கம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜ்கமல் நிறுவனம் விளக்கம்

அமரன் திரைப்படத்தில் காட்டப்பட்ட மாணவரின் மொபைல் நம்பர் நீக்கப்பட்டதாக ராஜ்கமல் நிறுவனம் தெரிவித்தது.
Published on

செய்தியாளர் : VM சுப்பையா

அமரன் திரைப்படத்தில் காட்டப்பட்ட மாணவரின் மொபைல் நம்பர் நீக்கப்பட்டதாக ராஜ்கமல் நிறுவனம் தெரிவித்தது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படத்தில், மாணவரின் மொபைல் இடம்பெற்றிருந்த காட்சி நீக்கப்பட்டுவிட்டதாக ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டெர்நேஷனல் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

நடிகர் கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கி நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளிக்கு திரைக்குவந்த அமரன் திரைப்படத்தில், கதாநாயகி சாய்பல்லவியின் மொபைல் எண் என்று தன்னுடயை எண்ணை காண்பித்ததால், பலர் அந்த எண்ணை தொடர்பு கொண்டதால் தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டதாக கூறி சென்னை அழ்வார் திருநகரை சேர்ந்த வாகீசன் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அமரன்
அமரன்File image

அந்த வழக்கு மனுவில், தொடர்ச்சியாக ஆயிரக்கணக்கான அழைப்புகள் வந்ததால், தன்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லை, படிக்க முடியவில்லை, பயணிக்க முடியவில்லை, ஏரோப்ளேன் மோடுக்கு மாற்றுவதற்குள் நூற்றுக்கணக்கான அழைப்புகள் வந்து மன உளைச்சலை ஏற்படுத்தியதால், அரசியல் சாசனம் வழங்கியுள்ள வாழ்வுரிமை, அந்தரங்க உரிமை ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளதால், ஒரு கோடியே 10 லட்ச ரூபாயை இழப்பீடாக வழங்க ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கும், ராஜ்குமார் பெரியசாமிக்கும் உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சவுந்தர் முன் விசாரணைக்கு வந்த போது, ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், மனுதாரரின் மொபைல் எண் இடம் பெற்றிருந்த காட்சி நீக்கப்பட்டு, தணிக்கை குழுவிடம் புதிய தணிக்கை சான்று பெறப்பட்டுள்ளதாக விளக்கமளித்தார்.

அமரன்
அமரன்pt

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முனுசாமி, இன்னும் தொடர்ந்து அழைப்புகள் வருவதாக தெரிவித்தார்.

அமரன் விவகாரம்
“ரூ 1.10 கோடி இழப்பீடு வேண்டும்” - அமரன் படத்தில் கைப்பேசி எண் பகிரப்பட்ட விவகாரத்தில் மாணவர் மனு!

இதையடுத்து, தொடர் அழைப்புகளால் மனுதாரரின் தனிப்பட்ட உரிமை பாதிக்கப்பட்டுள்ளது உண்மை தான் என்ற போதும், அதற்கு பொது சட்டத்தின் கீழ் தான் நிவாரணம் கோர முடியும் எனவும், ரிட் வழக்கில் இழப்பீடு வழங்கும்படி உத்தரவிட முடியாது எனவும் தெரிவித்த நீதிபதி, மனுவுக்கு பதிலளிக்கும்படி, தணிக்கை குழு, ராஜ்கமல் பிலிம்ஸ், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பர் 20ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com