காதலர் தினம் திரைப்படத்தை பார்த்திருப்போம், அதில் தன் அழகால் அனைவரையும் கொள்ளையடித்தவர் நடிகை சோனாலி பிந்த்ரே. பாலிவுட்டில் பல படங்களில் நடித்த சோனாலி பிந்த்ரே தமிழ், தெலுங்கு, கன்னட மொழிப் படங்களிலும் நடித்து புகழ்பெற்றார்.
சினிமாவில் பரபரப்பாக நடித்துக்கொண்டிருக்கும்போதே 2002 ஆம் ஆண்டு தயாரிப்பாளரும் இயக்குநருமான கோல்டி பெஹல்லை திருமணம் செய்து இல்லற வாழ்கையில் இணைந்தார். இந்தத் தம்பதியினருக்கு 2005 ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. திருமணத்துக்கு பின்பு திரைப்படங்களில் இருந்து ஒதுங்கியே இருந்தார் சோனாலி. அவ்வப்போது இந்தி தொலைக்காட்சிகளின் நடன நிகழ்ச்சிகளுக்கு நடுவராக இருந்தார்.
இந்நிலையில் சோனாலி பிந்த்ரே இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை எழுதியிருந்தார். அது பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. ஆம், சோனாலி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில் " வாழ்கை விசித்திரமானது. நீங்கள் எதிர்பார்க்காதது திடீரென நடந்துவிடும். ஆம், என்னை சோதித்த மருத்துவர் நான் தீவிர புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். உடம்பில் திடீரென ஏற்பட்ட வலி காரணமாக மருத்துவமனையில் சோதனை மேற்கொண்டேன்.
பரிசோதனையின் முடிவு இவ்வாறாக இருக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. உடனடியாக சிகிச்சை எடுக்க வேண்டும் என்பதற்காக அமெரிக்காவின் நியூயார்க் நகர் மருத்துவமனையில் சிகிச்சையை மேற்கொண்டு வருகிறேன். இதிலிருந்து விரைவில் மீண்டு விடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. புற்று நோய்க்கு எதிராக போராடிக்கொண்டு இருக்கிறேன், நிச்சயம் வென்று விடுவேன். எனக்கு பக்கபலமாக என் குடும்பத்தினரும் நண்பர்களும் இருக்கிறார்கள் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார் 43 வயதாகும் சோனாலி பிந்த்ரே.