தனது அடுத்த படம் ‘அவள்’ என்றும் அந்தப் படத்தை மிலிந்த் இயக்க இருப்பதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார் சித்தார்த்.
சில மாதங்களாக இவர் எந்தப் படங்களிலும் ஒப்பந்தமாகாமல் இருந்து வந்தார். மீண்டும் தமிழ் பக்கமே இருக்க விரும்புகிறாரா? இல்லை தெலுங்கு பக்கம் போக இருக்கிறாரா? என்று குழப்பம் நீடித்தது. இந்நிலையில் அவர் நடிக்கவுள்ள புதிய படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
விரைவில் இவர் நடிக்க இருக்கும் படம் த ஹவுஸ் நெக்ஸ்ட் டோர். இதில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் ஆண்ட்ரியா. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகிறது. இதற்கு தமிழில் ‘அவள்’ என்று தலைப்பிட்டுள்ளனர். நவம்பரில் இந்தப் படம் வெளியாக உள்ளது. இந்த விவரங்களை ஆண்ட்ரியாவும் சித்தார்த்தும் ஒரே சமயத்தில் ட்விட்டரில் அறிவித்துள்ளனர்.
இந்த அறிவிப்பு வெளியான உடனேயே ‘வாவ்வ்வ் ஆல் தி பெஸ்ட் மை டார்லிங்’ என்று சித்தார்த்தை வாழ்த்தியுள்ளார் வரலக்ஷ்மி சரத்குமார். அதோடு ஷாலினி பாண்டேவும் தன் வாழ்த்தை பகிர்ந்துள்ளார். ஷாலினி, ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 100% காதல் படத்தின் நாயகி என்பது குறிப்பிடத்தக்கது.