
‘ராஜா ராணி’ படத்தின் மூலம் திரையுலகிற்கு இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ. தான் இயக்கிய திரைப்படங்கள் அனைத்தையும் வெற்றிப் படங்களாக மட்டுமே தந்த இவர், தற்போது இந்தியில் ‘ஜவான்’ படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தில் ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா, பிரியாமணி, சான்யா மல்ஹோத்ரா, சுனில் குரோவர், யோகி பாபு, சிறப்புத் தோற்றத்தில் தீபிகா படுகோனே, சஞ்சய் தத் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். ‘ஜவான்’ படம், இயக்குநர் அட்லீ, நயன்தாரா, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு பாலிவுட்டில் அறிமுகப் படம் என்பதால் ஏராளமான எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இப்படத்தின் pre release event நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது.
இவ்விழாவில் பேசிய நடிகர் ஷாருக்கான் பேசுகையில், “தமிழ் திரையுலகில் இதற்கு முன் மணிரத்னம், சந்தோஷ் சிவன் ஆகிய இருவரை மட்டுமே எனக்கு தெரியும். ஜவான் படத்தின் மூலம் ஏராளமான தென்னிந்திய திரையுலக கலைஞர்கள் மற்றும் படைப்பாளிகளின் அறிமுகமும், நட்பும் கிடைத்திருக்கிறது. நான் தமிழ் மற்றும் தென்னிந்திய திரையுலகத்திலிருந்து நிறைய விசயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன்.
விஜய் சேதுபதி என் ரசிகையை பழி வாங்கி விட்டதாக சொன்னார். அது நிச்சயம் நடக்காது. ஏனென்றால் அவர் என் ரசிகை. நான் ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டேன்.
எங்கள் பட தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டே இயக்குநர் அட்லீ சொந்தமாக ஒரு படைப்பை உருவாக்கி இருக்கிறார். அவருக்கும் என் வாழ்த்துக்கள். பெற்றோர்களாகியிருக்கும் அட்லீக்கும் பிரியாவிற்கும் வாழ்த்துக்கள்.
இந்தப் படத்தின் நடனத்திற்காக நான் பட்ட பாடு.. மறக்க இயலாது. இயக்குநர் அட்லி மரண மாஸ்- ஒளிமயமான விஷ்ணு- கம்பீரமான முத்துராஜ்- விறுவிறுப்பான ரூபன்-அட்டகாசமான விஜய் சேதுபதி- வித்தைக்காரன் அனிருத் என இளம் திறமையாளர்களின் கூட்டணியில் தயாராகி இருக்கிறது 'ஜவான்'.
இயக்குநர் அட்லீ 'ஜவான்' படத்தில் வித்தியாசமான கோணத்தில் என்னை காட்சிப்படுத்தி இருக்கிறார். படத்தில் விஜய் சேதுபதியின் தோற்றம் நீங்கள் திரையில் பார்க்கும்போது தான் புரியும். சென்னை எக்ஸ்பிரஸ் படத்திற்கு பிறகு மீண்டும் பிரியாமணி இப்படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படம் அனைத்து ரசிகர்களையும் கவரும். இந்த திரைப்படம் செப்டம்பர் 7ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது '' என்றார்.
ஜவான் திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கௌரி கான் தயாரித்திருக்கிறார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றிருக்கிறார். இயக்குனர் அட்லி இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.