கேன்சர் நோயாளியின் கனவை நிறைவேற்றும் விதமாக அவருக்கு பிரத்யேக வீடியோ மெசேஜ் ஒன்றை அனுப்பியுள்ளார் ஷாரூக் கான்.
ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் பி.கே.அருணா. இவருக்கு அக்ஷத் என்ற மகனும் பிரியங்கா என்ற மகளும் உள்ளனர். அருணா, கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதற்காக கடந்த சில வருடங்களாக சிகிச்சைப் பெற்றுவருகிறார். ஷாரூக்கானின் தீவிர ரசிகையான இவர், அவரைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையை தெரிவித்துள்ளார். இது அவரது மகன் மற்றும் மகள் மூலமாக ஷாரூக்கானுக்கு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து ஷாரூக் கான், அருணாவுக்கு பிரத்யேக வீடியோ மெசேஜ் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ‘உங்கள் பிள்ளைகள் மூலமாக நீங்கள் உடல் நிலை சரியில்லாமல் இருப்பதாக அறிந்தேன். நீங்கள் தைரியமான பெண். வலுவான மனோதிடம் கொண்டவர். விரைவில் இந்த பாதிப்பில் இருந்து குணமடைவீர்கள். என் குடும்பம், உங்களை தெரிந்த நமது நண்பர்கள் அனைவரும் உங்களுக்காக பிரார்த்தனை செய்கிறோம். விரைவில் குணமடைவீர்கள். கண்டிப்பாக உங்களை சந்திப்பேன்’ என்று கூறியுள்ளார்.
அதோடு டாக்டர்கள் அனுமதியுடன் அவரிடம் ஷாரூக் கான் பேசவும் உள்ளார்.