‘ஆயிரத்தில் ஒருவன் 2’ என்பது என்னுள் புதைந்து கிடக்கும் நீண்ட நாள் தாகம் என இயக்குநர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் தலைப்பு ‘என்.ஜி.கே’. சூர்யா செல்வராகவன் கூட்டணியில் தயாராகும் முதல் படம் இது. இதில் ராகுல் பிரீத்சிங், சாய் பல்லவி என இரண்டு நடிகைகள் நடிக்கின்றனர்.
முன்னதாக செல்வராகவன் ‘துள்ளுவதோ இளமை’ என்ற இளம் வயது காதல் குறித்த படத்தின் மூலம் சினிமாவில் காலடி பதித்தார். அதன்பின் வந்த ‘காதல் கொண்டேன்’, ‘புதுப்பேட்டை’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘மயக்கம் என்ன’ என அடுத்தடுத்து படங்களில் புது ட்ரெண்ட் செட்டை உருவாக்கி ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பை உருவாக்கினார். ‘புதுப்பேட்டை’ படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற கேங்ஸ்டர் படமாக திகழ்ந்தது.
இதில் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படம் சோழர் கால கதையை மக்களிடம் சொல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து செல்வராகவன் ரசிகர்கள் ‘புதுப்பேட்டை2’ எப்போது வரும் எனக் கேள்வி எழுப்பியதற்கு நேரம் வரும்போது நிச்சயம் அமையும் என செல்வராகவன் பதிலளித்திருந்தார்.
இந்நிலையில் இயக்குநர் செல்வராகன் தனது ட்விட்டர் பக்கத்தில் "வெளியே எங்கு சென்றாலும் நண்பர்கள் ‘புதுப்பேட்டை2’எப்போது ? என்று அன்பாய் கேட்கின்றனர். நடக்கும் என சொல்வேன். ஆயின் என் மனதுக்குள் கேட்கும் தீரா ஓசை ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ எடுக்க வேண்டும் என்பதுதான். சோழன் பயணம் தொடர வேண்டும் என்பது என்னுள் புதைந்து கிடக்கும் நீண்ட நாள் தாகம்” எனத் தெரிவித்துள்ளார்.