ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ‘சந்தோஷ்’.. ஆனால் இந்தியாவில் வெளியிட தடை! அப்படி என்ன கதை?
இயக்குநர் சந்தியா சூரி வேதனை
பிரிட்டிஷ் - இந்திய திரைப்பட இயக்குநர் சந்தியா சூரி இயக்கி, கடந்த ஆண்டு வெளிநாடுகளில் திரையிடப்பட்ட படம், 'சந்தோஷ்'. இந்தப் படம், இங்கிலாந்து சார்பாக ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்ட்டது. அதேநேரத்தில், இந்த படத்தை இந்தியாவில் வெளியிட தணிக்கை வாரியம் (CBFC) தடை விதித்துள்ளது.
தடை குறித்து இயக்குநர் சந்தியா சூரி, “இந்தியாவில் இந்தப் படம் வெளியாக வேண்டும் என்பது எனக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது. அதனால் அதைச் செயல்படுத்த ஏதாவது வழி இருக்கிறதா என்று கண்டுபிடிக்க முயற்சித்தேன். ஆனால் இறுதியில், சில காட்சிகளை வெட்டி, அர்த்தமுள்ள ஒரு படத்தை உருவாக்குவது என்பது மிகவும் கடினமாக உள்ளது. இது எங்கள் அனைவருக்கும் ஆச்சரியமான முடிவு. ஏனென்றால் இந்தப் படத்தில் காட்டப்பட்டுள்ள பிரச்னைகள் இந்திய சினிமாவுக்குப் புதியவை என்றோ அல்லது இதற்கு முன்பு வேறு படங்களில் எழுப்பப்பட்டதில்லை என்றோ நான் நினைக்கவில்லை. சென்சார் வாரியம் வழங்கிய வெட்டுக்களின் பட்டியலை ஏற்றுக்கொள்ள முடியாது. சென்சார் குழுவின் முடிவு, ஏமாற்றமளிப்பதாகவும் மனதை உடைப்பதாகவும் இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார். த
இதுதொடர்பாக படத்தின் கதாநாயகி ஷஹானா கோஸ்வாமி, "படத்தை வெளியிடுவதற்குத் தேவையான சில மாற்றங்களின் பட்டியலை சென்சார் வழங்கியுள்ளது. எங்கள் முழு குழுவும் அதனுடன் உடன்படவில்லை. ஏனென்றால், அவர்கள் படத்தில் நிறைய மாற்றங்களைச் செய்ய விரும்புகிறார்கள். எனவே, இந்திய திரையரங்குகளில் வெளியிட முடியவில்லை. இந்தியாவில் வெளியிட இவ்வளவு வெட்டுக்களும் மாற்றங்களும் தேவைப்படுவது மிகவும் வருத்தமளிக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.
’சந்தோஷ்’ படத்திற்கு தடை ஏன்?
வட இந்தியாவில், கணவன் இறந்த பிறகு அவருக்குப் பதிலாக காவல் பணியில் சேரும் ஒரு பெண்ணிடம், பட்டியலின பெண்ணின் கொலை வழக்கு ஒப்படைக்கப்படுகிறது. வட இந்தியாவில் நிலவும் சாதிய பாகுபாடு, இஸ்லாமிய வெறுப்பு, பாலியல் வன்முறை ஆகியவற்றை பற்றி இப்படம் பேசுகிறது. படத்தில் உள்ள கருத்துகள் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறி பல பகுதிகளை வெட்ட தணிக்கை வாரியம் கோரியுள்ளது. ஆனால் அதற்கு படக்குழு மறுத்துள்ளதால் படத்தை வெளியிட தடை ஏற்பட்டுள்ளது.