நீங்கதான் அம்பானி பேமிலியாச்சே..பணத்தை பாக்கி இல்லாம கொடுங்க- ஞானவேல் ராஜாவுக்கு சமுத்திரக்கனி பதில்

நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் காயப்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் எனக் கூறியிருந்த ஞானவேல் ராஜாவுக்கு இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனி மற்றும் சசிகுமார் இருவரும் எதிர்ப்பு பதிலை பதிவிட்டுள்ளனர்.
ஞானவேல் ராஜா - சமுத்திரக்கனி
ஞானவேல் ராஜா - சமுத்திரக்கனிX

பருத்திவீரன் திரைப்பட விவகாரத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, இயக்குநர் அமீர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். அதில் இவர்களுக்கிடையேயான கருத்து பரிமாற்றம் சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. அதில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜவுக்கு எதிராகவும் இயக்குநர் அமீருக்கு ஆதரவாகவும் “ சமுத்திரக்கனி, சசிகுமார், கரு பழனியப்பன், பொன் வண்ணன், இயக்குநர் பாரதிராஜா” போன்ற பல்வேறு திரைப்பிரபலங்கள் தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.

இதையடுத்து தனது தவறான பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பதிவு ஒன்றினை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதில், “பருத்தி வீரன் பிரச்னை கடந்த 17 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. நான் இதுநாள் வரை அதை பற்றி பேசியது இல்லை என்றைக்குமே 'அமீர் அண்ணா’ என்றுதான் அவரை குறிப்பிடுவேன். ஆரம்பத்திலிருந்தே அவர் குடும்பத்தாருடன் நெருங்கிப்பழகியவன் நான். அவரது சமீபத்திய பேட்டிகளில் என் மீது அவர் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தியது. அதற்கு பதில் அளிக்கும் போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள், அவர் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வாழவைக்கும் சினிமா துறையையும் அதில் பணிபுரியும் அனைவரையும் மிகவும் மதிப்பவன் நான்” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஞானவேல் ராஜா மன்னிப்பு கூறியிருந்ததற்கு சமுத்திரக்கனி மற்றும் சசிகுமார் இருவரும் பதிலளித்து ஒரு பதிவை பதிவிட்டுள்ளனர். அதில் இந்த மன்னிப்பு கேட்டு மழுப்பும் வேலை வேண்டாம், நீங்க செய்ய வேண்டியது ஏமாற்றிய பணத்தை முழுமையாக திருப்பி தரவேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

ஏமாத்திட்டுபோன மொத்த பணத்தையும் திருப்பி கொடுங்க! - சமுத்திரக்கனி

ஞானவேல் ராஜா வெளியிட்ட மன்னிப்பு பதிவையும் பகிர்ந்திருக்கும் சமுத்திரக்கனி, “பிரதர், இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது. நீங்க செய்ய வேண்டியது எந்த பொதுவெளியில எகத்தாளமா உக்காந்துகிட்டு அருவருப்பான உடல் மொழியால சேற்ற வாரி இறைச்சீங்களோ, அதே பொதுவெளியில பகிரங்கமா மன்னிப்பு கேட்கணும். நீங்க கொடுத்த அந்த கேவலமான, தரங்கெட்ட இண்டெர்வியூ-வை சமூக வலைதளங்களில் இருந்து துடைச்சு தூர எறியணும்.

அன்னைக்கு கொடுக்காம ஏமாத்திட்டுப் போன பணத்தை ஒத்த பைசா பாக்கி இல்லாம திருப்பிக்கொடுக்கணும். ஏன்னா... கடனா வாங்குன நிறைய பேருக்கு திருப்பிக்கொடுக்க வேண்டியதிருக்கு. அப்புறம் ‘பருத்திவீரன்’ திரைப்படத்தில் வேலை பார்த்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பல பேருக்கு இன்னும் சம்பள பாக்கியிருக்கு. பாவம், அவங்கெல்லாம் எளிமையான குடும்பத்துல இருந்து வந்து வேல பார்த்தவங்க. நீங்க தான், அம்பானி பேமிலியாச்சே..!” என்று பதிவிட்டுள்ளார். மேலும் காலம் கடந்த நீதி, மறுக்கப்பட்ட நீதி என்றும் கடைசியில் எழுதியுள்ளார்.

போலியான வருத்தத்திற்கு உண்மையைப் பலி கொடுக்க முடியாது! - சசிகுமார்

போலியான வருத்தத்திற்கு உண்மையைப் பலி கொடுக்க முடியாது என பதிவிட்டிருக்கும் சசிகுமார், “அமீர் அண்ணன் ஞானவேல் ராஜா மீது சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்ன? ”நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் புண்படுத்தியிருந்தால்.. என்று குறிப்பிட்டுச் சொல்கிறார் ஞானவேல் ராஜா. அப்படியெனில் அந்த சில வார்த்தைகள்’ என்ன? “ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், “திட்டமிட்டு ஒருவரை அவமானப்படுத்திவிட்டு அவருக்கு அவரே வருந்துவது என்ன மாதிரியான வருத்தம்? இதன்மூலம் அமீர் அண்ணனுக்கு ஞானவேல் ராஜா சொல்லவருவது என்ன? பெயரிடப்படாத அந்த கடிதம் யாருக்கு?” என்ற கேள்வியையும் முன்வைத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com