“20 ஆண்டுகள், 20 படங்கள், பல்வேறு சர்வதேச விருதுகள்” – சரித்திரம் படைத்த இயக்குநர் கோஷ் பிறந்த தினம் இன்று

“20 ஆண்டுகள், 20 படங்கள், பல்வேறு சர்வதேச விருதுகள்” – சரித்திரம் படைத்த இயக்குநர் கோஷ் பிறந்த தினம் இன்று

“20 ஆண்டுகள், 20 படங்கள், பல்வேறு சர்வதேச விருதுகள்” – சரித்திரம் படைத்த இயக்குநர் கோஷ் பிறந்த தினம் இன்று
Published on

“ஒரு சொல்லாக வேணும் மிஞ்சிவிட வேண்டும்., நமக்குப் பின் நம் பேர் சொல்லும் படி எதையாவது செய்துவிட வேண்டும். நம் மரணத்திற்கு பிறகு நம்மை பல ஆண்டுகள் இந்த உலகம் நினைவில் வைத்திருக்க வேண்டும்” என்ற அடையாள தக்கவைப்பின் மீதான ஆசை தான் வரலாற்றின் பக்கங்களில் பக்கம் பக்கமாக எழுதப்பட்டிருக்கிறது.
 
தன்னை சிலையாக வடித்துக் கொள்வதில் துவங்கி, இன்று தினம் பத்து செல்பி எடுத்து சோசியல் மீடியாக்களில் பதிவிட்டுக் கொள்வது வரை மனிதனுக்கு தன் அடையாளத்தை தக்க வைத்துக் கொள்வதில் தான் எத்தனை ஆசை. எத்தனை வெறி. ஆனால் காலம் அனைத்தையும் புறங்கையால் ஓரம் தள்ளிவிட்டு தகுதியானதை மட்டுமே தனதாக்கிக் கொள்ளும். உண்மையில் நமக்கும் பிறகு நம்மை மற்றவர்கள் நினைத்து என்னவாகப் போகிறது., இல்லை மறந்து தான் என்னவாகப் போகிறது. ஒரு சொல்லாக வேணும் மிஞ்சிவிட வேண்டும் என போராடும் சராசரி மனிதர்களுக்கு மத்தியில் போகிற போக்கில் கவிதையாகி விடுகிறார்கள் கலைஞர்கள். அப்படியொரு கவிதையாக தன் வாழ்வை எழுதிக்கொண்ட மேற்கு வங்க இயக்குனர் ரிதுபர்னோ கோஷ் பிறந்த தினம் இன்று. 20 ஆண்டுகள். 20 படங்கள். பல்வேறு சர்வதேச விருதுகள் என வெற்றியின் எஸ்கலேட்டரில் நிதானமாக பயணத்தவர் கோஷ்.

மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தாவில் 1963 ஆகஸ்ட் மாதம் 31’ஆம் நாள் பிறந்தவர் ரிதுபர்னோ கோஷ். இவரது பெற்றோரும் கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் தான். தந்தை சுனில் ஓவியர் மற்றும் ஆவணப்பட இயக்குனர். வங்களத்தின் புகழ் பெற்ற இயக்குனர் சத்ய ஜித்ரேவின் தீவிரமான ரசிகர் கோஷ். தனக்கு ஜித்ரே போல வரவேண்டும் என்பதே ஆசை எனச் சொல்வார். அதை சாத்தியப்படுத்தியும் காட்டினார். ஜித்ரேவைப் போலவே தனிமனித உணர்வுகளை அழகாக படம் பிடித்தார் கோஷ். உறவுகளின் முரணை அன்பை வாழ்வின் நிலையற்ற தன்மையை கோஷ் எடுத்துப் பேசும் பாணி தனி. தன் மானசீக குருவான சத்ய ஜித்ரேவைப் போலவே இவரும் நாவல்களை படமாக்குவதில் ஆர்வம் கொண்டிருந்தார்.

துவக்க காலத்தில் விளம்பர நிறுவனமொன்றில் வசனம் எழுதும் பணியில் வேலை செய்தார் கோஷ். பிறகு விளம்பரப்பட இயக்குனராக உயர்ந்தார். இந்த அனுபவங்களைக் கொண்டு மெல்ல சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். 1994ம் ஆண்டு ’ஹைரர் அங்தி’என்ற பெங்காலி திரைப்படம் மூலம் இயக்குனராக உருவெடுத்தார். இந்தப்படம் ’ஸ்ரீ ஷெண்டு முகோபாத்யாய்’ என்ற வங்காள மொழி எழுத்தாளரின் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது. அதன் பிறகு தொடர்ந்து 20 ஆண்டுகள் வாங்கள சினிமாவின் ஷட்டர்  ஸ்பீட் கோஷின் கட்டுப் பாட்டில் இருந்தது.

இந்தி உலகின் உச்ச நடிகர்கள் பலரும் ரிதுபர்னோ கோஷின் அழைப்புக்காக காத்திருந்தனர். ஐஸ்வர்யாராய் ரிதுபர்னோ கோஷின் இயக்கத்தில் நடிக்க ஆசைப்பட்டு விரும்பி நடித்த படம் ’சோக்கர் பாலி’. அதன் பிறகு கோஷ் இயக்கத்தில் ரெயின்கோட் என்ற படத்திலும் அவர் நடித்திருந்தார். ரவீந்திரநாத் தாகூரின் படைப்பான சோக்கர் பாலியை இயக்குவது என கோஷ் முடிவு செய்தபோது பலர் அதை வரவேற்றனர். சிலருக்கு பயமும் இருந்தது. ரபிந்திரநாத் தாகூரின் படைப்பை கோஷ் சரியாக படம் பிடித்துவிடுவாரா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால்  கோஷ் தாகூர் படைப்பில் இருந்த ஆன்மாவை சற்றும் குறைவின்றி திரையில் கடத்தி இருந்தார். 

சிறந்த பெங்காலி மொழிப்படம் என இப்படம் தேசிய விருதையும் பெற்றது. பிறகு இந்தி மற்றும் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட இத்திரைப்படம் வசூலிலும் வென்றது. ரிதுபர்னோ சோஷின் சிறப்புகளில் இதுவும் ஒன்று. கமர்சியல் சினிமாக்களைப் போலவே இவரது படைப்புகள் வசூலிலும் வெல்லும் அதே நேரம் படைப்பின் சர்வதேச தரத்தில் சமரசமும் செய்து கொள்ளாது. ஐஸ்வர்யாராயைத் தொடர்ந்து ’ த லாஸ்ட் லியர்’ படத்தில் அமிதாப் பச்சனையும் இயக்கி இருப்பார் கோஷ். பச்சன் குடும்பத்தில் அனைவரையும் இயக்கிய இயக்குனர் என இவரச் சொல்லலாம். பாலிவுட்டின் பல கலைஞர்கள் ஐஸ்வர்யாராய், அமிதாப் பச்சனைப் போல அவரது படத்தில் நடிக்க விரும்பி ஆசைப்பட்டு நடித்தனர்.

’ஹைரர் அங்தி’யைத் தொடர்ந்து அவர் இயக்கிய இரண்டாவது சினிமா ’உனிஸ் ஏப்ரல்’. இப்படத்திற்கு சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகை என பிரிவுகளின் கீழ் இரு தேசிய விருது கிடைத்தது. மனைவி ரெடி என்ற தமிழ் படத்தில் பாண்டியராஜனுக்கு ஜோடியாக நடித்திருந்த தேவஸ்ரீராய் இப்படத்தில் நடித்திருந்தார். தேவஸ்ரீராய்க்கு கிடைத்த முதல் தேசிய விருது இது.
.
மாற்று சினிமாவிற்கான வலிமையான தளத்தை உருவாக்கியவர்களில் கோஷ் குறிப்பிடத்தக்கவர். தோசர், தகான், உத்சப், ரெயின்கோட், கேலா, சன்கிளாஸ், அபோகோமென், அந்தர் மஹால், தி லாஸ்ட் லீயர் என இவர் இயக்கத்தில் உருவான படங்களாகட்டும் இவர் நடித்த மெமரீஸ் இன் மார்ச் போன்ற திரைப்படங்களாகட்டும் எல்லாமே வழக்கமான சினிமா பாணியின் சுற்றுவட்டப் பாதையிலிருந்து வெளியிலேயே பயணித்திருக்கும்.

மனிதர்களில் ஓரினச் சேர்க்கையை வெளிப்படையாக ஆதரித்த வெகுசிலரின் ரிதுபர்னோ கோஷும் ஒருவர். "நான் ஒரு ஓரினச்சேர்க்கை ஆதரவாளன். ஓரினச்சேர்க்கையின் போது தான், மனம் முழு திருப்தியடைகிறது, அதில்தான், உணர்ச்சிகள் சரியாக பிரதிபலிக்கிறது.’ என்று ஒரு நேர்காணலில் கோஷ் பேசினார். இந்த நேர்காணலுக்குப் பிறகு சராசரி சமுதாயம் இவரது படைப்புகளை ஒதுக்கிவிட்டு இவரது கருத்து பற்றியே விவாதித்தது. அது அவருக்கு பெரிய மன உளைச்சளை உருவாக்கி மரணம் வரை தள்ளியது. 

’அரெக்ட்டி ப்ரேமர் கொல்போ’ என்ற படத்தில் ஓரினச் சேர்க்கையாளராக நடிக்க ரிது பர்னோஷோஸ் மார்பக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அது அவரது உடல் நிலையை மேலும் மோசமாக்கியது. மாற்று பாலின ஈர்ப்பு பற்றி பேசும் மெமரீஸ் இன் மார்ச் என்ற படத்தில் கோஷ் நடித்திருப்பார். இந்தியாவில் இந்திய திரைக்கலைஞர்களால் உருவாக்கப்பட்ட ஆங்கில மொழிப்படம் இது, வழக்கமாக மாற்று பாலியல் ஈர்ப்பு பற்றி பேசும் 

பல படங்கள் பிரச்சார பாணியில் இருக்கும் அல்லது வெறுமனே உணச்சிகளைப் பேசுவதாக இருக்கும். ஆனால் ’மெமரீஸ் இன் மார்ச்’. அதில் ரொம்பவே மாறுபட்டது. விபத்தில் இறந்த மகனது உடலை பெற்றுக் கொள்ள கொல்கத்தா வருகிறார் தாய் தீப்தி நோவல். தன் மகனுடன் பணிபுரியும் சக ஊழியர்களோடு பேசும் போது தான் தெரியவருகிறது தன் மகன் ஓரினச் சேர்க்கையாளனாக இருந்ததும் அவனது இணையாக ரிதுபர்னோ கோஷ் இருந்ததும். முதலில் அதிர்ச்சியடைந்தாலும். ‘சரி அது அவனது தேர்வாக இருந்திருக்கிறது. நான் என்ன சொல்ல...’ என அதனை மிக எளிமையாக கடந்து போவார் தாய் தீப்தி நோவல். அந்த கதாப்பாத்திரம் தான் படத்தின் பலம். கோஷ் நிகழ்த்தும் மாயமும் அது தான்.

சிலரது படைப்புகளைத் தான் நாம் நமது நிஜ வாழ்வோடு நெருக்கமாக இணைத்துப் பார்க்க முடியும். ரிதுபர்னோ கோஷ் தான் உருவாக்கும் அனைத்து கதாபாத்திரங்களையும் அப்படியே வடிவமைத்திருப்பார். உண்மையைச் சொல்வதானால் இவரது கதாபாத்திரங்கள் பலவும் நாம் இயல்பு வாழ்வில் அடிக்கடி எதிர்கொள்ளாத அல்லது சந்திக்காத சிறப்பு வகையினராகத் தான் இருப்பர் என்றாலும் அவர்களை நாம் ஏற்றுக் கொள்ளும் படி நம்மாள் மறுக்க முடியாதபடி நம்முள் கடத்திவிடுவார் கோஷ் அது தான் அவர் திரையில் செய்யும் மாயம். அதே நேரம் நாம் அன்றாடம் செய்தித் தாள்களில் படிக்கும் ஏதோ ஒரு சம்பவத்தோடு இவரது கதைகளுக்கு தொடர்பு இருக்கும் ‘தஹான்’ திரைப்படம் அந்த வகை தான்.

தேசியவிருது இயக்குனர் என்றே ஊடகங்கள் இவரை குறிப்பிடும். இருபதே வருடங்கள் இருவது படங்கள் தான் என்றாலும் இவரது பங்களிப்புள்ள படம் நிச்சயம் ஏதோ ஒரு பிரிவின் கீழ் தேசிய விருதைப் பெற்றுவிடும். 

சினிமா வாழ்க்கையப் போல ரிது பர்னோ கோஷின் தனிப்பட்ட வாழ்க்கை அத்தனை வெற்றிகரமாக அமையவில்லை. இறுதிகாலத்தில் உடல் நலிவுற்று மிகவும் தனிமைப்பட்டிருந்த அவர் தனது 49’வது வயதில் மே 30 2013’ல் தன் வீட்டில் மாரடைப்பால் இறந்து கிடந்தார். அமிதாப் பச்சனும் இதனை தனது தனிப்பட்ட இழப்பாக நினைத்து அழுதார். இந்திய திரையுலகமே கோஷின் எதிர்பாராத மரணத்தால் கலங்கி நின்றது. ரிது பர்னோ கோஷ் மறைந்தாலும் அவரது படைப்புகள் எப்போதும் புதியவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கும்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com