“நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துங்கள்”  - பதிவாளர் உத்தரவு

“நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துங்கள்” - பதிவாளர் உத்தரவு

“நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துங்கள்” - பதிவாளர் உத்தரவு
Published on

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு தென்சென்னை மாவட்ட பதிவாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

நடிகர் சங்கத் தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் கே.பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றன. இதற்கான பிரசாரத்தில் இரு தரப்பும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். முன்னணி நடிகர், நடிகைகளைச் சந்தித்து ஆதரவும் திரட்டி வருகின்றனர். 

இதனிடையே இந்தத் தேர்தலுக்கு உரிய பாதுகாப்பு வழங்க சென்னை காவல்துறை ஆணையருக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி நடிகர் விஷால் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனு மீதான விசாரணையில், பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால் எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு ஈசிஆர், ஓஎம்ஆர் பகுதிகளில் தேர்தலை நடத்த ஆட்சேபனையில்லை என நீதிபதி தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் பாண்டவர் அணியினர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து பேசினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், நடிகர் சங்க தேர்தலை நியாயமான முறையில் போதிய பாதுகாப்புடன் நடத்த ஆளுநரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தார். 

இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு தென்சென்னை மாவட்ட பதிவாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், “44 தொழில்முறை உறுப்பினர்களை தொழில்முறை அல்லாத உறுப்பினர்களாக மாற்றியதாக பதிவாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. முழுமையான விசாரணை முடியும்வரையில் தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com