பிரபல நடிகரின் சகோதரர் மரணம்: குடும்பத்தினர் இல்லாமல் இறுதிச்சடங்கு
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர், ரவி தேஜாவின் தம்பி பரத் ராஜூ, கார் விபத்தில் நேற்று பலியானார். இவரும், சில படங்களில் நடித்துள்ளார்.
உயிரிழந்த பரத் ராஜூவின் இறுதிச்சடங்கிற்கு, அவரது இளைய சகோதரர் ரகுவைத் தவிர குடும்பத்தினர் வேறு யாரும் கலந்துகொள்ளவில்லை. பரத் ராஜுவின் உடல் பிணவறையில் இருந்து நேராக ஈமச்சடங்கு நடக்கும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. நடிகர் ரவி தேஜாவின் நெருக்கமான நண்பரான நடிகர் உத்தேஜ் இதுகுறித்து பேசியபோது, “பரத் ராஜின் மரணத்தால் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உள்ளனர். பரத் ராஜின் இத்தகைய கோர மரணத்தினால், சிதைந்த அவரது உடலைக் காண அவர்களால் முடியாது என்பதால் அவர்கள் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளவில்லை”எனக் கூறினார்.
பரத் ராஜு, நேற்று காலை, காரில், ஐதராபாத் புறநகர் பகுதியில் வேகமாக காரை ஓட்டிச் சென்றிருக்கிறார். ஷம்சாபாத் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதியது. காரில் இருந்த பரத், படுகாயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து பேசிய போலீசார் கூறுகையில், 'பரத், குடிபோதையில் காரை ஓட்டியதால், விபத்து ஏற்பட்டிருக்கலாம் என, சந்தேகிக்கிறோம். சில ஆண்டுகளுக்கு முன், போதைப் பொருள் வைத்திருந்தது தொடர்பான வழக்கில், பரத் கைது செய்யப்பட்டார்' என்றனர்.