’’கொரோனா போராட்டத்தில் ஜெயிக்க பாசிட்டிவாக இருங்கள்’’ - ராஷ்மிகா மந்தனா
’’இந்தப் போராட்டத்தில் ஜெயிக்க பாசிட்டிவாக இருங்கள்’’ என்று ராஷ்மிகா மந்தனா தனது ரசிகர்களுக்கு உற்சாகமளித்துள்ளார்.
கொரோனா முதல் அலையைவிட இரண்டாம் அலையில் பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பால் பல மாநிலங்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் பலர் வேலையிழந்து, நம்பிக்கையிழந்து தவித்துவருகின்றனர். இந்நிலையில், தனது ரசிகர்களிடையே நம்பிக்கை மற்றும் உற்சாகத்தை ஊக்குவிக்க, நடிகை ராஷ்மிகா மந்தனா சாதாரண மக்களின் அசாதாரண செயல்களை சமீபகாலமாக தனது சமூக ஊடகங்களில் பகிர்ந்துவருகிறார்.
அவர் தற்போது பதிவிட்டுள்ள வீடியோவில் பாதுகாப்பாக இருப்பது மற்றும் நேர்மறை எண்ணங்களை வளர்ப்பது குறித்து பேசியிருக்கிறார். அதில் சாதாரண நபர்கள் எப்படி தங்கள் அக்கம்பக்கத்தினருக்கு உதவுகின்றனர் என்பது குறித்து பேசியிருக்கிறார். அதில், ”நாம் யாரும் இதுபோன்ற ஒரு சூழ்நிலையை எதிர்பார்க்கவில்லை. இந்த போராட்டத்தில் ஜெயிக்க பாசிட்டிவ் எண்ணத்துடன் எதிர்கொள்வது அவசியம்’’ என்று பேசியிருக்கிறார். இவரின் பேச்சு கொரோனா நோயாளிகள் மற்றும் நம்பிக்கையிழந்து நிற்போருக்கு உற்சாகத்தையும், தன்னம்பிக்கையையும் கொடுப்பதாக ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துவருகின்றனர்.
அல்லு அர்ஜுனுடன் ராஷ்மிகா நடித்துவரும் புஷ்பா திரைப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.