‘இந்த விஷயம் என் மனதை மிகவும் காயப்படுத்துகிறது’ - ராஷ்மிகா மந்தனா இன்ஸ்டாவில் வேதனை

‘இந்த விஷயம் என் மனதை மிகவும் காயப்படுத்துகிறது’ - ராஷ்மிகா மந்தனா இன்ஸ்டாவில் வேதனை
‘இந்த விஷயம் என் மனதை மிகவும் காயப்படுத்துகிறது’ - ராஷ்மிகா மந்தனா இன்ஸ்டாவில் வேதனை

நேஷனல் க்ரஷ் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் ராஷ்மிகா மந்தனா. தென்னிந்தியாவின் முன்னணி நடிகையான இவர், தற்போது தமிழில் விஜய்யின் ‘வாரிசு’, இந்தியில் ‘Mission Majnu’ மற்றும் ‘Animal’, தெலுங்கில் ‘புஷ்பா 2’ உள்ளிட்டப் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், தொடர்ந்து சமூகவலைத்தளத்தில் ட்ரோல் செய்யப்பட்டு வருவதாக, நடிகை ராஷ்மிகா மந்தனா வருத்தத்துடனுடன், எச்சரிக்கை செய்தும் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில், “வணக்கம்.. கடந்த சில நாட்களாக அல்லது வாரங்களாக அல்லது மாதங்களாக அல்லது சில வருடங்களாக சில விஷயங்கள் என்னைத் தொந்தரவு செய்து வருகின்றன, நான் அதைச் சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன். நான் எனக்காக மட்டுமே இதனைப் பேசுகிறேன். பல ஆண்டுகளுக்கு முன்பே இதை நான் செய்திருக்க வேண்டும். எனது சினிமா பயணத்தை நான் தொடங்கியதிலிருந்து நிறைய வெறுப்புகளை பெற்று வருகிறேன். நிறைய ட்ரோல்களுக்கும் எதிர்மறை கருத்துக்களுக்கும் உண்மையில் பை (bye) சொல்ல வேண்டும்.

நான் தேர்ந்தெடுத்துள்ள இந்த வாழ்க்கை ஒரு பரிசுடன் தான் வரும் என்பதை நான் அறிவேன். எல்லோருக்கும் பிடித்தமானவளாக நான் இருக்க வேண்டும் என்பது இல்லை. அனைவரும் என்னை ஆதரிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கவும் முடியாது. அதேநேரத்தில் உங்களுக்கு என்னைப் பிடிக்காவிட்டால், அதற்காக நெகட்டிவிட்டியை பரப்பலாம் என்று அர்த்தமல்ல. உங்கள் அனைவரையும் மகிழ்விப்பதற்காக எந்த வகையான கடினமானப் பணிகளை மேற்கொள்கிறேன் என்பது எனக்கு மட்டுமே தெரியும். எனது படங்களின் மூலம் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதில் மட்டுமே நான் மிகவும் அக்கறை காட்டுகிறேன். நீங்களும், நானும் பெருமைப்படக்கூடிய விஷயங்களை வெளிப்படுத்த என்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறேன்.

குறிப்பாக நான் சொல்லாத விஷயங்களுக்காக இணையத்தில் என்னை கேலி செய்யும்போது, மனது உடைந்து எனக்கு அது மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. நேர்காணல்களில் நான் பேசிய சில விஷயங்கள் எனக்கு எதிராகத் திருப்பப்படுவதைப் பார்க்க முடிகிறது. என்னைப் பற்றி இணையத்தில் பரப்பப்படும் தவறான செய்திகள் எனக்கும், சினிமாத் துறையில் அல்லது வெளியில் உள்ள என்னுடைய உறவுகளுக்கும் மிகவும் காயத்தை ஏற்படுத்தும். ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை நான் வரவேற்கிறேன், ஏனென்றால் அது என்னை மேம்படுத்தி சிறப்பாக இன்னும் பணிபுரியத் தூண்டும். ஆனால் மோசமான எதிர்மறை மற்றும் வெறுப்புடன் வரும் செய்திகளால் உங்களுக்கு என்ன கிடைக்கப்போகிறது?.

மிக நீண்ட காலமாக நான் இதனை புறக்கணித்த நிலையில், தற்போது அது எல்லை மீறி சென்றுவிட்டது. உங்களை வெல்வதற்காக இதனை நான் எடுத்துரைக்கவில்லை. தொடர்ந்து பெறும் இந்த வெறுப்பின் காரணமாக இதனை தற்போது சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். உங்களின் நிலையான அன்பும் ஆதரவும்தான் என்னைத் இந்தத் துறையில் தொடர வைத்தது, தற்போது மனதைவிட்டு சமூகவலைத்தளத்தில் வந்து இதைச் சொல்ல எனக்கு தைரியத்தைக் கொடுத்தது.

என்னைச் சுற்றியுள்ள அனைவரிடமும், இதுவரை நான் பணியாற்றியவர்களிடமும், நான் எப்போதும் ரசித்த அனைவரிடமும் நான் அன்பை மட்டுமே செலுத்துகிறேன். தொடர்ந்து கடினமாக உழைத்து உங்களுக்காக சிறப்பான படங்களைச் செய்வேன். ஏனென்றால் ஏற்கனவே நான் சொன்னது போல், உங்களை மகிழ்விப்பது தான், எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எல்லோரும் அன்பாக இருங்கள். நாங்கள் அனைவரும் எங்களால் முடிந்ததைச் செய்ய முயற்சிக்கிறோம்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவருக்கு துல்கர் சல்மான், ஹன்சிகா உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com