“கந்தனுக்கு அரோகரா” - தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த ரஜினி
கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுத்ததற்கு தமிழக அரசுக்கு பாராட்டுகள் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய வழக்கில் கறுப்பர் கூட்டம் யூடியுப் சேனலின் சுரேந்திரன் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் இருந்த அனைத்து வீடியோக்களையும் நீக்கியுள்ளனர்.
இந்நிலையில், கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுத்ததற்கு தமிழக அரசுக்கு பாராட்டுகள் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “கந்த சஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து, பல கோடி தமிழ் மக்களின் மனதை புண்படுத்தி கொந்தளிக்க செய்த, இந்த ஈனச் செயலை வாழ்க்கையில் மறக்கமுடியாதபடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்த அரசுக்கு தனது பாராட்டுகள். இனிமேலாவது மதத்துவேசமும் கடவுள் நிபந்தனையும் ஒழியட்டும். ஒழியணும். எல்லா மதமும் சம்மதமே.. கந்தனுக்கு அரோகரா” எனத் தெரிவித்துள்ளார்.