‘பேட்ட’ ட்ரெய்லரும்.. அதற்குப் பின்னால் இருக்கும் ‘கொல காண்டு’ சுவாரஸ்யங்களும்..

‘பேட்ட’ ட்ரெய்லரும்.. அதற்குப் பின்னால் இருக்கும் ‘கொல காண்டு’ சுவாரஸ்யங்களும்..
‘பேட்ட’ ட்ரெய்லரும்.. அதற்குப் பின்னால் இருக்கும் ‘கொல காண்டு’ சுவாரஸ்யங்களும்..

இந்த வருஷம் இறுதியில் ‘2.0’. புத்தாண்டு தொடக்கத்தின் அடையாளமாக பொங்கலை முன்வைத்து ‘பேட்ட’ ரிலீஸ் என ரஜினியின் சினிமா கேரியர் மிக ரகளையாக மாறியிருக்கிறது.

இன்று காலை 11 மணிக்கு ‘பேட்ட’ ட்ரெய்லர் வெளியாகும் என வழக்கம்போல படக்குழு அறிவிப்புக் கொடுக்க, அதை பொறுக்காமல் சிலர் அதற்கு முன்பாகவே சில காட்சிகளை சட்டத்திற்குப் புறம்பாக கள்ளத்தனமாக லீக் செய்ய ஆரம்பித்துவிட்டனர். அப்புறம் என்ன படக்குழுவே இறுதியில் இறங்கி வந்து 10.30  மணிக்கே அதிகாரப்பூர்வமான ட்ரெய்லரை வெளியிட்டு ரசிகர்கள் மனத்தில் சந்தோஷத்தை பொங்க வைத்தது.

ஒவ்வொரு முறையும் ரஜினியின் ட்ரெய்லர் தேதியும் நேரத்தையும் படக்குழு குறித்துக் கொடுத்தாலும் அதற்கு முன்பாகவே திருட்டுத்தனமாக அதனை சிலர் வெளியிட்டு விடுவது வாடிக்கையாகி உள்ளது. கடந்த முறை ‘காலா’விற்கும் இதுதான் நடந்தது. ‘2.0’ படத்திற்கும் இதுவேதான் நடந்தது. இப்போது ‘பேட்ட’யும் இதே பிரச்னையை சந்தித்திருக்கிறது. என்னதான் திருட்டுத்தனமாக ட்ரெய்லரின் சில காட்சிகள் வெளியானாலும் ரஜினியின் நிஜ ட்ரெய்லருக்கு எந்தப் பாதிப்பும் இதனால் ஏற்படவில்லை என்பதே களநிலவரமாக உள்ளது.

அதாவது ட்ரெய்லர் வெளியான ஒரு மணிநேரத்திற்குள் 10 லட்சம் பேர் கண்டுகளித்துள்ளதாக யுடியூப் நிறுவனமே அதிகாரப்பூர்வ அறிக்கையை வழங்கியுள்ளது. மாலை 7.30 நிலவரப்படி 6,194,593 பேர் கண்டுகளித்துள்ளதாக புள்ளிவிபரம் சொல்கிறது. இந்த ட்ரெய்லர் வெளியான உடனேயே ட்விட்டரில் ரஜினியின் ‘பேட்ட’ படத்திற்கான ஹேஷ்டேக்குகளும் ட்ரெண்ட் ஆக ஆரம்பித்தன.  ‘PettaTrailer’, ‘PettaTrailergetRajiniFied’,‘PettaPongalParaak’ போன்ற ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகின. மேலும் ‘PettaTrailer’ ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் உலக அளவில் 6வது இடத்தில் இருந்தது.

ரஜினியின் படங்கள் யுடியூப்பில் சாதனை படைப்பது இது முதன் முறை இல்லை. 2018-ம் ஆண்டு இறுதி பட்டியல் படி யுடியூப்பில் ‘காலா’வும் ‘2.0’ படமும் சாதனைப் பட்டியலில் இடம்பிடித்திருந்தன. இதே ஆண்டின் கடைசியில் ‘பேட்ட’ ட்ரெய்லரும் முக்கிய இடத்தை பிடிக்க உள்ளது.

இந்தத் தகவல்கள் எல்லாம் ட்ரெய்லர் ரிலீஸுக்கு பிந்தையது. அந்த ட்ரெய்லர் எப்படி?

‘அபூர்வராகங்கள்’ படத்தில் இரும்பு கேட்டை தள்ளிக் கொண்டு உள்ளே நுழைகின்ற காட்சி ரஜினியின் சினிமா வாழ்க்கைகளில் மறக்க முடியாத முதல் தரமான காட்சி. அந்தக் காட்சியினை நினைவுப்படுத்துகின்ற மாதிரி ஒரு காட்சி ‘பேட்ட’ ட்ரெய்லரில் வருகிறது. ட்ரெய்லரின் தொடக்கமே விஜய்சேதுபதியில் இருந்துதான் தொடங்குகிறது. ஆக, இந்த மாஸ் ஃபார்மூலாவை தாண்டி ரஜினி தன் சினிமா வாழ்க்கையை ஆரம்பித்திருக்கிறார் என்பது தெளிவாகிறது.

இந்த ட்ரெய்லரில் பலர் பேசிகிறார்கள். சிம்ரன் பேசுகிறார். பாபிசிம்ஹா பேசுகிறார். மற்றும் சிலர் பேசுகிறார்கள். ஆனால் ரஜினியின் வார்த்தைகள் மட்டும் தனியே தெரிகின்றன. ஆக, படத்தின் ஃபார்மூலா மாறினாலும் ரஜினி தன் அடையாளத்தை அழுத்தமாக பதிய வைத்துவிடுகிறார்.

இளமையான ரஜினி, ‘அண்ணாமலை’ படத்திற்குப் பிறகு சைக்கிள் ஓட்டிச் செல்கிறார். அவரது இளமை சைக்கிள் மூலம் நிரூபிக்கப்படுகிறது. “இருபது பேரை அனுப்பி வைச்சோம். எல்லோரையும் அடிச்சு துவைச்சுட்டான்” என்ற வரிகள் ரஜினியின் செகண்ட் ஆஃப் பலத்தை எடுத்து பேசுகின்றன எனப் புரிந்துக் கொள்ளலாம். “சிறப்பான, தரமான சம்பவங்களை இனிமேல்தான்  பார்க்கபோற” என்றார் ரஜினி. இதோடு இறுதியில் “எவனுக்காவது பொண்ணாட்டி, குழந்தை குட்டினு செண்டிமெண்ட் இருந்தா மவனே சொல்லிக்காம அப்படியே ஓடிப் போயிடு. கொல காண்டுல இருக்கேன்” என்கிறார்.

இதன் மூலம் இந்த ட்ரெய்லர் சொல்லும் கதை என்ன?

மதுரையில் ரவுடியாக வலம் வந்த ரஜினி டார்ஜிலிங் பகுதிக்கு தப்பிப் போய் தலைமறைவாக வாழ்வதாக தெரிகிறது. ஆக, கொஞ்சம்  ‘பாட்சா’ ஸ்டைல். அங்கே அவர் ஹாஸ்டல் வார்டன். அந்தக் கல்லூரியில் பாபிசிம்ஹா ஒரு அராத்து மாணவர். அதை வைத்து சண்டை வலுக்கிறது, பழைய வேகத்தை மீண்டும் தொடங்குகிறார் ரஜினி. இப்படி ஒரு கதையை பலரும் கூறுகிறார்கள். ஆனால் அது ‘பேட்ட’யோடு சம்பந்தப்பட்டுள்ளதா என ரிலீஸுக்குப் பின் தான் தெரியும். எப்படியும் இந்தப் பொங்கல் தல, தலைவர் பொங்கலாக வரிசை கட்ட உள்ளது என்பது திரை ரசிகர்களுக்கு கூடுதல் சந்தோஷம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com