சினிமா
ரஜினியின் ‘சந்திரமுகி2’... கொரோனாவிற்கு 3 கோடி -ராகவா லாரன்ஸ் சர்ப்ரைஸ்
ரஜினியின் ‘சந்திரமுகி2’... கொரோனாவிற்கு 3 கோடி -ராகவா லாரன்ஸ் சர்ப்ரைஸ்
ரஜினிகாந்த்தின் சந்திரமுகி2 படத்தில் நடிக்க உள்ளதாக ராகவா லாரன்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பின் எதிரொலியாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றனர். தமிழகத்தைப் பொறுத்தவரை அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மட்டும் மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதற்கான நேரமும் அண்மையில் மதியம் 1 மணி வரை எனக் குறைக்கப்பட்டது. இந்த ஊரடங்கு உத்தரவால் அன்றாடம் வேலை செய்து பிழைப்பு நடத்தும் ஊழியர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக சினிமாவில் அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த முழு முடக்கத்தால் சினிமாவில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான பெப்சி ஊழியர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே இவர்களின் நிலைமையைக் கருத்தில் கொண்டு முன்னணி நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள் உதவ முன் வர வேண்டும் என பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி திரைப்பட நட்சத்திரங்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் கொரோனா நிவாரண நிதியாக மொத்தம் 3 கோடி ரூபாய் வழங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “அடுத்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஆசியுடன் சந்திரமுகி2’ வில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறேன். இயக்குநர் .பி.வாசு இயக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. இதனை சன் பிக்சர் தயாரிக்கிறது” என்று கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து அவர், “கொரோனா நிவாரணத்திற்காகப் பிரதமர் நிதிக்கு 50 லட்சம் வழங்கி உள்ளேன். மேலும் தமிழக முதல்வரின் நிதிக்கு 50 லட்சம் வழங்கியுள்ளேன். பெப்சி தொழிலாளர்களுக்காக 50 லட்சமும் நடன இயக்குநர்கள் அமைப்புக்கு 50 லட்சமும் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு 25 லட்சமும் நான் பிறந்து வளர்ந்த இடமான ராயபுரம் பகுதியிலுள்ள கூலித் தொழிலாளர்களுக்கு 75 லட்சமும் வழங்கியுள்ளேன். மற்றும் அவர்களின் தேவைக்கான உணவுகளை வழங்குவதில் காவல்துறை உதவினர். அவர்களின் உதவி சிறப்பாக இருந்தது” என்று கூறியுள்ளார்.
முன்னதாக நடிகர் ரஜினி 50 லட்சமும் விஜய் சேதுபதி 10 லட்சமும் நயன்தாரா 20 லட்சமும் கொரோனா நிதிக்காக வழங்கியுள்ளனர். அதேபோல் கமல்ஹாசன், சிவகுமார், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி, உதயநிதி, தனுஷ், சிவகார்த்திகேயன், நடிகை குஷ்பு, 'மாஸ்டர்' தயாரிப்பாளர் லலித் குமார், இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்தத் திட்டத்தில் பங்களிப்பு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.