"முன்னாள் முதல்வர் கலைஞரின் செல்ல மகளாக பங்கேற்கிறேன்"-நினைவுகளை பகிரும் நடிகை ராதிகா

"முன்னாள் முதல்வர் கலைஞரின் செல்ல மகளாக பங்கேற்கிறேன்"-நினைவுகளை பகிரும் நடிகை ராதிகா
"முன்னாள் முதல்வர் கலைஞரின் செல்ல மகளாக பங்கேற்கிறேன்"-நினைவுகளை பகிரும் நடிகை ராதிகா

வடசென்னை திமுக சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் மற்றும் உலக மகளிர் தின விழா இன்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் அமைச்சர் சேகர்பாபு, திரைப்பட நடிகை ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் பங்கேற்று பேசிய நடிகா ராதிகா, “அரசியல் விழாவாக இருக்குமோ என்று நினைத்தேன். ஆனால் பெண்களுக்கான விழாவாக ஒருங்கிணைத்து இருக்கின்றனர். இதில் நான் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் செல்ல மகளாக பங்கேற்று இருக்கிறேன். அவரிடம் நான் பயிற்சி பெற்றது இப்போது எனக்கு நினைவுக்கு வருகிறது. நான் இன்னும் அவரின் குடும்பத்தில் ஒருவராக இருப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். அதேபோல் என் தந்தை எம்.ஆர்.ராதா மற்றும் கலைஞர் கருணாநிதி இருவரின் நட்பு அற்புதமானது” என்று தெரிவித்தார். 

மேலும், தைரியமான பெண்ணாக, சுயமரியாதையுடன் வாழ்க்கையை எப்படி - எவ்வாறு வாழ வேண்டும் என பேசுகையில், தன்னுடைய வாழ்க்கையை அவர் நினைவு கூர்ந்தார். அவர் பேசுகையில், “பெண்கள் தலை நிமிர்ந்து செயல்பட வேண்டும். நிதி மேலாண்மையை நிர்வகிக்க இன்னும் பலமாக வேண்டும். இதில் முக்கியமாக பெண்களுக்கு கல்வி தான் அவசியமானது. வீடு, அலுவலகப் பணி என சுழன்று செயல்படும் பெண்கள், அவர்களின் உடல் நலத்தில் அக்கறை கொள்ள வேண்டும். ஆண் குழந்தைகளை அளவுடன் தான் பெண்கள் கவனிக்க வேண்டும். பெண்கள் அவர்களுக்கான இலக்குடன் செயல்பட வேண்டும்; வலிகள் இருந்தால் தான் நாம் வெற்றி பெற முடியும்" என பேசி, நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை ஊக்கப்படுத்தினார்.

மேலும் அவர் பேசுகையில், “மகளிருக்கு, திமுக அரசு பல திட்டங்களை செய்து வருகிறது. அதைப் பயன்படுத்தி சிறப்பான வாழ்க்கையை பெண்கள் ஏற்படுத்தி கொள்ள வேண்டும். முன்னாள் முதல்வர் கருணாநிதி அமைத்து கொடுத்த பாதையில் இந்த அரசு சிறப்பாக செயல்படுகிறது. இந்த தருணத்தில் அவரின் பேச்சு, செயல்கள் யாவும் காண (மிஸ் செய்வதாக) முடியாத நிலை இருக்கிறது. திமுக அரசு பெண்கள் தலை நிமிர்ந்து நடக்க கற்றுக் கொடுத்து இருக்கிறது. முதல்வரின் கரம் பிடித்து பெண்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.

அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், “ஒருகாலத்தில் பெண்களுக்கு படிப்பு மற்றும் வேலை எதற்கு என்று கேட்டார்கள். ஆனால் இன்று தமிழகத்தில் பல துறையில் பெண்கள் அதிகாரிகளாக இருக்கின்றனர். மகளிர் சுய உதவிக்குழு கடன்களை, பொறுப்பேற்ற உடன் முதல்வர் ஸ்டாலின் தள்ளுபடி செய்தார். 3,400 கோடி மகளிர் தொழில் தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து இருக்கிறது. மாநகராட்சி பள்ளியில் படித்த கல்லூரி பயிலும் மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறோம். பெண்களுக்கு கட்டணமில்லா பயணம் போன்றவை முதல்வரின் சிறப்பான திட்டம்” என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com