திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி: முதல்வருக்கு தயாரிப்பாளர்கள் நன்றி
திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்ததையடுத்து முதல்வர் பழனிசாமி, மற்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் கடந்த மார்ச் மாதம் முதல் திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால் திரையரங்க உரிமையாளர்கள் கடுமையான நஷ்டத்தை எதிர்கொண்டனர். அத்துடன் ஏராளமான திரையரங்க ஊழியர்களும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்தனர். அதன்பின்னர், மத்திய அரசு அக்டோபர் 15 ஆம் தேதி முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்கலாம் என அனுமதியளித்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு அன்றைய தினம் தமிழகத்தில் திரையரங்குகளை இயக்க அனுமதியளிக்கவில்லை.
இதனைத்தொடர்ந்து திரையரங்குகளை திறக்க வேண்டும் என்பது தொடர்பான கோரிக்கை பலமுறை, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் கொண்டு செல்லப்பட்டது. தமிழகத்தில் நவம்பர் 10 ஆம் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதியளித்தது. இதற்கிடையே பொங்கல் ரிலீசை முன்னிட்டு 100% இருக்கைக்கு அனுமதி அளிக்க வேண்டுமென திரைத்துறையினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
சமீபத்தில் நடிகர் விஜய்யும், முதல்வர் பழனிசாமியை சந்தித்து கோரிக்கை விடுத்தார். இன்று அறிக்கை வெளியிட்ட சிலம்பரசன், 100% இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார். இதைத்தொடர்ந்து திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பான அரசாணையையும் வெளியிடபட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கும் நன்றி தெரிவித்துள்ளது. மேலும், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா, முதலமைச்சருக்கும், அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.