தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலுக்கும், அவரது எதிர் தரப்பினருக்கும் இடையிலான மோதல் முற்றியுள்ளது. தயாரிப்பாளர் சங்கத்தில் 7 கோடி ரூபாய் வைப்புநிதி கையாடல் செய்யப்பட்டிருப்பதாக அச்சங்கத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும் தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவின் ஒப்புதல் பெறாமல் இளையராஜாவின் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக அச்சங்கத்தில் உள்ள ஏ.எல்.அழகப்பன், T.சிவா, ஜே.கே. ரித்தீஷ், எஸ்.வி. சேகர், சுரேஷ் காமாட்சி உள்ளிட்டோர் சென்னையில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகங்களுக்கு பூட்டு போட்டனர். இதையடுத்து சென்னை தியாகராய நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்கத்திற்கு விஷால் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வருகை தந்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் விஷால் கைது செய்யப்பட்டு மாலை ஜாமினில் வெளியே வந்தார். இதனிடையே தயாரிப்பாளர் சங்கத்தின் பூட்டு பதிவுத்துறை அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட்டது. பின்னர் பதிவுத்துறை அதிகாரிகள் தயாரிப்பாளர் சங்கதிற்கு சீல் வைத்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் விஷால் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இந்த மனுவை பிற்பகல் அவசர வழக்காக விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சென்னை தி.நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்கத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலை 11 மணியளவில் கிண்டி வட்டாச்சியர் ராம்குமார் முன்னிலையில் தயாரிப்பாளர் சங்கத்தின் வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டது.இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்க விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி நாளை மறுநாள் விஷால் ஆலோசனை நடத்த உள்ளார்.மேலும் விஷால் தலைமையில் தயாரிப்பாளர் சங்க செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.