தமிழ் திரைத்துறையின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வருகிறது வாடிவாசல் திரைப்படம். இதில் கோலிவுட்டின் உச்ச நட்சத்திரமான சூர்யா கதாநாயகனாக நடிக்கிறார். கலைப்புலி எஸ்.தாணு இந்த படத்தை தயாரிக்கிறார். இந்நிலையில், வடிவாசல் படத்தில் இருந்து சூர்யா விலகியுள்ளதாக எஸ்.தாணு பெயரிலான ட்விட்டர் கணக்கு ஒன்றில் தகவல் வெளியானது. அதனால், சூர்யா விலகிவிட்டாரா அல்லது அவருக்கு பதிலாக வேறு யாரேனும் நடிக்கிறார்களா என்ற கேள்விகள் எழுந்தன.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் வெளியான தகவலுக்கு தயாரிப்பாளர் தாணு தன்னுடைய சொந்த ட்விட்டர் கணக்கில் இருந்து விளக்கம் அளித்துள்ளார். “எண்ணியது எண்ணியபடி, சொல்லியது சொல்லியபடி, வெற்றி மாறன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் “வாடிவாசல்" வலம் வரும் வாகை சூடும். ” என ட்வீட் செய்து வாடிவாசல் தொடர்பான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தவறான தகவல்களை பரப்பாதீர்கள் என ஹாஷ்டேகும் போட்டுள்ளார் அவர்.
இந்த ட்வீட்டில் நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் வெற்றிமாறனை டேக் செய்துள்ளார் தாணு என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜல்லிக்கட்டை கதைக்களமாக கொண்டுள்ள இந்தப்படத்தில் சூர்யா ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கும் வீரராக நடித்து வருகிறார்.