சூர்யாவின் அடுத்த படத்தில் ப்ரியா வாரியர் ஜோடியா?
சூர்யாவின் அடுத்த படத்தில் ப்ரியா வாரியர் ஜோடியாக நடிக்க இருப்பதாக வெளியான செய்தி குறித்து கே.வி. ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார்.
செல்வராகவன் இயக்கி வரும் ‘என்ஜிகே’ படத்தில் தற்சமயம் சூர்யா நடித்து வருகிறார். அந்தப் படம் இந்தத் தீபாவளிக்கு திரைக்கு வர இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதனை அடுத்து சூர்யா நடிக்க போகும் படத்தினை இயக்குநர் கே.வி. ஆனந்த் இயக்க இருக்கிறார். அந்தத் தகவல் உண்மையா என்பது குறித்து தெளிவு இல்லாமல் இருந்தது. பின் இதனை ஆனந்தே உறுதிப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில் இவர் இயக்க உள்ள படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ப்ரியா வாரியர் நடிக்க இருப்பதாக தகவல் பரவி வந்தது. மலையாள சினிமா உலகில் ‘அதார் லவ்’ பாடல் காட்சி மூலம் வைரலானவர் ப்ரியா வாரியர். அந்தப் பாடல் காட்சிகளை கண்டுவர்கள் பலர் இவருக்கு ரசிகர் ஆனார்கள். இந்திய அளவில் ட்விட்டர் பக்கத்திலும் யூடியூப்பிலும் ட்ரெண்ட் ஆனார் ப்ரியா. ஆகவே புகழின் உச்சத்தில் இருக்கும் இவரை சூர்யா தன் அடுத்த படத்தில் ஜோடியாக ஏற்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இந்தச் செய்திக்கு இயக்குநர் கே.வி. ஆனந்த் மறுப்பு தெரிவித்துள்ளார். அவரை நடிக்க வைப்பதற்கான எந்த முயற்சியும் நடைபெறவில்லை என அவர் கூறியிருக்கிறார்.
கே.வி.ஆனந்த் இயக்கும் படத்தை லைகா புரொடக்ஷன் தயாரிக்க உள்ளது. இதற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க உள்ளார். பட்டுக்கோட்டை பிரபாகர் திரைக்கதை எழுத உள்ளார். இந்தப் படம் அடுத்த ஆண்டு திரைக்கு வர உள்ளது.