தமிழில் வெளியாகும் பிரியங்கா சோப்ராவின் ‘பே வாட்ச்’
பிரியங்கா சோப்ராவின் முதல் ஹாலிவுட் படமான ‘பே வாட்ச்’ வரும் ஜுன் 2 ஆம் தேதி தமிழில் வெளியாகிறது.
இந்தியாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் பிரியங்கா சோப்ரா. பாலிவுட்டில் டாப் லெவலில் இருந்து இவருக்கு ஹாலிவுட்டில் ‘குவாண்டிகோ’ சீரியலில் நடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்திக் கொண்ட பிரியங்கா, அமெரிக்கா ரசிகர்களை மட்டுமல்ல. ஹாலிவுட் திரை உலகினரையும் கவர்ந்தார். இதனால், உலக திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு ஜொலித்தார். இவருடைய நடிப்பையும், குணாசியங்களையும் ஹாலிவுட் திரையுலகினர் புகழ்ந்து பேச ஆரம்பித்தனர். இதன் மூலம், ‘பே வாட்ச்’ என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்தப் படத்தில் தி ராக் என்று அழைக்கப்படும் வேய்ன் ஜான்சன், ஜாக் எப்ரான், அலெக்ஸாண்டர் டட்டாரியோ ஆகியோருடன் நடித்துள்ளார். சேத் கோர்டன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா முக்கிய வேடத்தில் அறிமுகமாகியிருக்கிறார். இந்த படத்தை உலகமெங்கும் பாரமவுண்ட் பிக்சர்ஸ் வெளியிடுகிறது. இந்த படம் ஹாலிவுட்டில் கடந்த 26 ஆம் தேதி வெளியானது. இந்தியா முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வருகிற ஜூன் 2 ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தை தமிழில் ஹியு பாக்ஸ் ஸ்டுடியோ நிறுவனம் வெளியிடுகிறது.
முன்னாள் உலக அழகியான பிரியங்கா சோப்ரா திரையுலகில் காலடி எடுத்து வைத்தது விஜய் நடித்த `தமிழன்' படத்தின் மூலம் தான். அதன்பிறகு பாலிவுட்டில் மிகப்பெரிய நட்சத்திரமாக உயர்ந்து, தற்போது ‘பே வாட்ச்’ படத்தின் மூலம் ஹாலிவுட்டிலும் தடம்பதித்துவிட்டார்.