மெக்சிகோவில் தலை தீபாவளி கொண்டாடிய பிரியங்கா சோப்ரா
தன் கணவருடன் ‘தலை’ தீபாவளி கொண்டாடிய புகைப்படங்களை இன்ஸ்டாவில் நடிகை பிரியங்கா சோப்ரா பகிர்ந்து கொண்டுள்ளார்.
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கும் நிக் ஜோன்ஸுக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. ஜிக் ஒரு வெளிநாட்டுக்காரர். பிரியங்காவைவிட வயதில் குறைவான நிக்கை இவர் மணம் புரிந்ததால் பாலிவுட் உலகில் இந்தத் திருமணம் பேசு பொருளாக மாறியது.
இந்நிலையில் இந்த இளம் ஜோடி தீபாவளி பண்டிகையை மிக உற்சாகமாக மெக்சிகோவில் கொண்டாடி வருகிறது. இது இவர்களது திருமணத்திற்குப் பிறகு வரும் முதல் தீபாவளி. ஆக, இந்திய வழக்கபடி படி இது இவர்களுக்கு தலை தீபாவளி. தங்களது தீபாவளி கொண்டாட்டம் சம்பந்தமான புகைப்படங்களை பிரியங்கா, தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதில், “எல்லோருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள். நாங்கள் ‘காபோ’வில் தீபாவளி கொண்டாடுகிறோம். அமைதியும் செழிப்பும் பெருகட்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார். ‘காபோ சான் லுகாஸ்’ என்பது ஒரு ரெசார்ட். இது மெக்சிகோவில் உள்ளது. அங்குதான் இந்த ஜோடி தற்போது உள்ளனர்.
இந்தப் படத்தில் பிரியங்கா தங்க நிறத்திலான சேலையை அணிந்துள்ளார். ஆனால் வெள்ளை சட்டையில் மிக சாதாரணமாக நிக் உள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன் வடமாநிலங்களில் மணமான புது தம்பதிகள் மிக விமரிசையாக கொண்டாடப்படும் ‘கர்வா செளத்’ பண்டிகையை இந்த ஜோடி கொண்டாடியது. அப்போது நிக் தன் இன்ஸ்டாவில் ஒரு பதிவை இட்டிருந்தார். அதில், “என் மனைவி ஒரு இந்தியன். அவர் ஒரு ஹிந்து. அவர் எனக்கு ஹிந்து கலாசாரத்தையும் மதத்தையும் கற்று தந்தார். நான் அவரை நேசிக்கிறேன். மதிக்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.