தள்ளிப்போகும் ராஜமெளலியின் ‘ஆர்ஆர்ஆர்’ வெளியீடு: விரைவில் புதிய தேதி அறிவிப்பு
ராஜமெளலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் வெளியீட்டை படக்குழு தள்ளி வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் ராஜமௌலி இயக்கியுள்ள 'ஆர்ஆர்ஆர்' படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், ஆலியா பட் நடிப்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. வரும் அக்டோபர் 13-ஆம் தேதி உலகம் முழுக்க தியேட்டர்களில் வெளியாகும் ஏற்கனவே அறிவித்திருந்தது படக்குழு. படம் வெளியாக இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் இன்னும் படப்பிடிப்பை முடிக்கவில்லை படக்குழு. 90 சதவீத படப்பிடிப்புகள் முடிந்த நிலையில், 10 சதவீத படப்பிடிப்பை தற்போது உக்ரைனில் எடுத்து வருகிறது படக்குழு.
இந்த நிலையில், அக்டோபர் 13 ஆம் தேதி வெளியாகவிருந்த ’ஆர்ஆர்ஆர்’ படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு தள்ளி வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் இன்னும் தியேட்டர்கள் திறக்கப்படாததும் பட வெளியீட்டுத் தேதியை தள்ளி வைத்ததற்கான காரணமாகச் சொல்லப்படுகிறது. மேலும், அல்லுரி சீதாராமராஜூ, கொமரம் பீம் என்கிற இரு சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கையை முன்வைத்து ’ஆர்ஆர்ஆர்’ படத்தின் கதை 1920களில் நடைபெறுவது போல் எடுக்கப்பட்டுள்ளது. அதனால், படத்தை வரும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 26 குடியரசு தினத்தையொட்டி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.விரைவில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.