ஈஸ்வரன் பட பாம்பு சர்ச்சை.. விலங்குநல வாரியத்தின் விதிமுறைகள் சொல்வது என்ன?

ஈஸ்வரன் பட பாம்பு சர்ச்சை.. விலங்குநல வாரியத்தின் விதிமுறைகள் சொல்வது என்ன?
ஈஸ்வரன் பட பாம்பு சர்ச்சை.. விலங்குநல வாரியத்தின் விதிமுறைகள் சொல்வது என்ன?

நடிகர் சிலம்பரசன் நடிப்பில் இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் ஈஸ்வரன். இப்படத்திற்காக நடிகர் சிலம்பரசன் கடினமான உடற்பயிற்சி செய்து உடல் எடையைக் குறைத்துள்ளார். அது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

அதனைத் தொடர்ந்து ஈஸ்வரன் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. அந்தப் போஸ்டரானது சிலம்பரசன் தனது கையில் பாம்பு ஒன்றை வைத்திருப்பது போல வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்தப் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் வைரலான நிலையில், நடிகர் சிலம்பரசன் பாம்பு ஒன்றை கையால் பிடித்து சாக்குப்பைக்குள் வைப்பது போன்ற வீடியோவும் வெளியாகி வைரலானது.

இதனைப்பார்த்த சமூக ஆர்வலர்கள், சிலம்பரசன் பாம்பை கொடுமைப்படுத்தியதாகவும், படக்குழு வன உயிரின சட்டத்தை மீறியுள்ளதாகவும் புகார் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து விளக்கம் அளித்த அப்படத்தின் இயக்குநர் சுசீந்திரன் படப்பிடிப்பில் உபயோகிக்கப்பட்ட பாம்பானது பிளாஸ்டிக் பாம்பு என்றும் பாம்பு கிராபிக்ஸ் முறையில் நிஜ பாம்பாக சித்தரிக்கப்படும் என்றும் விளக்கம் அளித்தார்.

 இந்நிலையில் ஈஸ்வரன் படப்பிடிப்பில் பிளாஸ்டிக் பாம்பை பயன்படுத்துவதற்கு விலங்குநலவாரியத்திடம் அனுமதி பெறாததால் சமூக வலைதளங்களில் உலாவும் ஈஸ்வரன் படத்தின் போஸ்டர் மற்றும் ட்ரெய்லரை உடனடியாக இருந்து நீக்க வேண்டும் என அவ்வமைப்பு ஈஸ்வரன் படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில் கிராபிக்ஸ் முறையில் விலங்குகளை சித்தரிக்கக் கூட விலங்கு நலவாரியத்திடம் அனுமதி பெற வேண்டுமா என்பது குறித்த வனத்துறை அதிகாரியின் விளக்கத்தை ’டைம்ஸ் ஆஃப் இந்தியா’ வெளியிட்டுள்ளது. அதில்,  “ சினிமாவில் தற்போது வடிவமைக்கப்படும் கிராபிக்ஸ் காட்சிகள் பார்ப்பதற்கு மிக உண்மையாக இருக்கின்றன. ஆகையால் உண்மையான விலங்குகளிடம் இருந்து நீங்கள் அதனை வேறுப்படுத்தி காண்பிக்க வேண்டிய மெனக்கிடவேண்டியதில்லை.

அதனால்தான் படப்பிடிப்பு நடத்தும் படக்குழு என்.ஓ.சி சான்றிதழ் ( தடையில்லாச் சான்றிதழ்) பெற வேண்டியது அவசியமாகிறது. படப்பிடிப்பின் போது விலங்குகள் இயல்பாக இருக்கும் காட்சிகளை நீங்கள் படம் பிடிக்க அனுமதி உண்டு. ஆனால் அதில் நீங்கள் குறுக்கிட்டு விலங்குகளை உங்களுக்கு ஏற்றவாறு செயல்படுத்துவது தவறாகும். எப்படியேனும் படக்குழு என்.ஓ.சி சான்றிதழை வாங்குவது கட்டாயம்.

ஈஸ்வரன் படத்தை பொருத்தவரை அவர்கள் பாம்பை கிராபிக்ஸ் முறையில் பயன்படுத்தியுள்ளார்கள் என்பது தெரிகிறது. இருப்பினும் அவர்கள் சான்றிதழ் வாங்க வேண்டும். சான்றிதழ் வாங்கும் வரை ட்ரெய்லருக்கு அனுமதி கிடையாது.

இது குறித்து ஈஸ்வரன் படத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவர் பேசும் போது “ விலங்கு நலவாரியத்திடம் இருந்து நோட்டீஸ் வந்ததும், படப்பிடிப்பில் பயன்படுத்தப்பட்ட பாம்பானது பிளாஸ்டிக் பாம்பு என்பதற்கான அனைத்து ஆதாரங்களையும் கடந்த வியாழக்கிழமை அவர்களிடம் சமர்பித்தோம். ஆனால் நாங்கள் கடந்த 20 நாட்கள் முன்னரே என்.ஓ.சி பெறுவதற்கான விண்ணப்பத்தை விலங்கு நலவாரியத்திடம் சமர்பித்திருக்கிறோம். அதன் பின்னரே ஈஸ்வரன் படத்தின் போஸ்டரை வெளியிட்டோம். உண்மையில் படத்தை வெளியிடுவதற்கே என்.ஓ.சி சான்றிதழ் தேவை, போஸ்டர் வெளியிடுவதற்கு இல்லை என தெரிவித்துள்ளார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com