தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து நாளை நடைபெற உள்ள நிலையில், தபால் வாக்குகள் வரத் தொடங்கியுள்ளன.
சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலைப் போல அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல். 2015ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற நாசர் அணியின் பதவிக்காலம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முடிந்த நிலையில், நடிகர் சங்க கட்டடப்பணிகள் முடியாததால் தேர்தல் 6 மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டது. பின்னர் அந்த காலக்கெடு முடிந்த நிலையில் கடந்த மே 14ஆம் தேதி நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில், நடிகர் சங்கத் தேர்தலை நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து ஜூன் 23ஆம் தேதி (நாளை) ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் தலைமையில் தேர்தல் நடைபெறுகிறது.
இந்நிலையில்,நடிகர் சங்கத் தேர்தலில் 3 ஆயிரத்து 171 பேர் வாக்களிக்க உள்ள சூழலில் ஆயிரத்து 45 பேர் தபால் வாக்களிக்க உள்ளனர். தபால் வாக்கு அளிக்கும் உறுப்பினர்களுக்கு வாக்குச் சீட்டுகள் கடந்த 17ஆம் தேதி அனுப்பி வைக்கப்பட்டன. இதில், பதிவு செய்யப்பட்ட வாக்குகளை உறுப்பினர்கள் தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி வருகின்றனர். மேலும் சென்னையில் முகவரி கொண்ட உறுப்பினர்கள் நாளை வெளியூரில் இருக்கும் பட்சத்தில் அவர்கள் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம், தேர்தல் அறிவிப்பு வெளியான ஏழு நாட்களுக்குள் அதற்கான கடிதம் கொடுத்து, வாக்குச்சீட்டுகளை தபால் மூலம் பெற்று இருக்க வேண்டும். அப்படி பெறாதவர்கள் சென்னையில் நேரில் வந்தே வாக்களிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.