பிரபல பின்னணி பாடகி எடுத்த விபரீத முடிவு; அதிர்ச்சியில் திரையுலகம்!
பிரபல திரைப்பட பின்னணி பாடகி கல்பனா ஹைதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் தற்கொலைக்கு முயன்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் திரையுலகில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் முக்கிய பின்னணி பாடகிகளில் ஒருவர் கல்பனா. ராசாவின் மனசுல படம் தொடங்கி வரலாறு, மைனா, ரஜினி முருகன், மாமன்னன் என இவர் பல படங்களில் பல்வேறு பாடல்களைப் பாடியிருக்கிறார்.
தமிழ் மொழி மட்டுமல்லாது, தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களில் பாடல்கள் பாடியுள்ள கல்பனா, ஹைதராபாத்தில் தனது அடுக்குமாடி குடியிருப்பில் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதற்கிடையே இவர் ஹைதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் தற்கொலைக்கு முயன்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஹைதராபாத்தின் நிஜாம்பேட் பகுதியில் அவர் வசித்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களாகவே அவர் வீட்டை விட்டு வெளியே வரவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவருக்கு போன் செய்துள்ளனர். இருப்பினும், அவர் போனை எடுக்கவில்லை.
வெகுநேரமாக கதவு திறக்கப்படாமல் உள்ளதால், அக்கம்பக்கத்தினர் காவல் துறைக்கு தகவல் கொடுத்ததின் பெயரில், காவல் துறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது கல்பனா மயங்கிய நிலையில்
கிடந்துள்ளார். தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்று தெரியவந்தநிலையில், உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில், தற்போது அவருக்கு செயற்கை சுவாச கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
தற்கொலை சட்டப்படி குற்றமாகும். அந்த எண்ணம் தோன்றினால் 104 என்ற இலவச எண்ணிற்கு அழைக்கவும்.