ஜோதிகா நடித்திருக்கும் ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் இந்த மாதம் 27 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஜேஜே ஃப்ரெட்ரிக் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் ‘பொன்மகள் வந்தாள்’. இந்தப் படத்தில் நடிகை ஜோதிகா நடித்துள்ளார். பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து எடுத்துள்ள இப்படம் ஜோதிகாவின் திரை வாழ்வில் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனெனில், மீண்டும் அவர் திரை வாழ்க்கைக்கு திரும்பிய பிறகு பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படும் சமூக பிரச்னை சார்ந்த கதைகளை மட்டுமே தேர்தெடுத்து நடித்து வருகிறார்.
இந்தப் படத்தை ராஜசேகர் பாண்டியன் மற்றும் சூர்யா ஆகியோர் இணைந்து 2டி எண்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளனர். இதில் பார்த்திபன், பாக்யராஜ், பிரதாப் போத்தன் உள்ளிட்ட பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்து வருகிறார்.
இதனிடையே இந்தப் படம் குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் சார்பில் நேற்று ட்விட்டர் பக்கத்தில் ஒரு அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்நிலையில் நடிகர் சூர்யா அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு போஸ்டரை பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த போஸ்டரில் ஜோதிகா, வழக்கறிஞர் உடையில் உள்ளார். ஆகவே, அவர் இப்படத்தில் வழக்கறிஞர் வேடத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. மேலும், இந்த போஸ்டர் குறித்து சூர்யா, “எனக்கும் ஜோதிகாவிற்கும் இந்தப் படம் ஸ்பெஷல் ஆனது. இந்த மாதம் 27 ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் இந்தப் படம் திரையில் வெளியாகும்” எனக் கூறிப்பிட்டுள்ளார்.