“உயிரிழந்த 3 சகோதரர்களுக்கு நான் செய்யும் கடமையாக இதை பார்க்கிறேன்” - கமல்ஹாசன்
உயிரிழந்த 3 சகோதரர்களுக்கு நான் செய்யும் கடமையாக இதனை பார்க்கிறேன் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி ‘இந்தியன்2’ படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விழுந்து 3 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர். இந்த விவகாரம் சினிமாத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக கிரேன் ஆபரேட்டரை போலீசார் கைது செய்தனர்.
இந்த விபத்து குறித்து ஏற்கெனவே இயக்குநர் ஷங்கரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதைத்தொடர்ந்து
இந்த விபத்து தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு, நடிகர் கமலுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். அதன்படி சென்னையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் நடிகர் கமல்ஹாசன் இன்று ஆஜரானார். அவரிடம் விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கமல்ஹாசன், “இந்த விபத்து தொடர்பாக நடந்த சம்பவத்தை பற்றிய விவரங்கள் அறிய காவல்துறை என்னை அழைத்திருந்தனர். நடந்த விபத்தில் அடிபடாமல் தப்பித்தவர்களில் நானும் ஒருவன். அதனால் நடந்த சம்பவத்தை பற்றிய விவரங்களை கூறுவது எனது கடமை.
இழந்த 3 சகோதரர்களுக்கு நான் செய்யும் கடமையாக இதை பார்க்கிறேன். அங்கு நடந்த விவரங்களை நான் காவல்துறையிடம் கூறியுள்ளேன்.
எங்கள் துறையில் இனி இதுபோன்று விபத்துகள் நடைபெறாமல் இருக்க இனி நாங்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடலாகவே இதை நான் பார்க்கிறேன்.
‘தேவையற்ற அழைப்பு.. காரணமற்ற விசாரணை.. நம்மவருக்கு சம்மன்’ - மநீம நிர்வாகி ட்வீட்
இனி இது போன்று விபத்துகள் நடக்காமல் இருக்க காவல்துறையின் ஆலோசனையையும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். திரைத்துறை சார்ந்தவர்கள் விரைவில் சந்தித்து பேசவுள்ளோம். அது குறித்த தகவல்களையும் ஊடகங்களுக்கு தெரிவிக்கிறோம்” எனத் தெரிவித்தார்.