சுஷாந்த் சிங் காதலியுடன் நெருக்கமான படங்களால் சர்ச்சை : ஆலியா பாட்டின் தந்தையிடம் விசாரணை
நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி அவரது மும்பை பாந்த்ரா வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். பட வாய்ப்புகள் அவருக்கு மறுக்கப்பட்டதாக ஒருபுறமும் அவரது காதலி ரியா சக்ரவர்த்தி பிரிவினாலும்தான் அவர் தற்கொலை செய்துகொண்டார் என்கின்ற பல்வேறு தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், அவரது காதலி ரியா சக்ரவர்த்தி பாலிவுட்டின் பிரபல இயக்குநரும் தயாரிப்பாளரும் நடிகை ஆலியா பாட்டின் தந்தையுமான 71 வயதாகும் மகேஷ் பாட்டுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் அடிக்கடி சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை கிளப்பி வந்தன. அவரால்தான், சுஷாந்தின் காதலில் ரியா சக்ரவர்த்தி பிரிந்துசென்றார் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், சந்தேகத்தின்பேரில் இன்று மதியம் பாந்த்ரா காவல்துறையினர் இயக்குநர் மகேஷ் பாட்டிடம் விசாரணை நடத்தினர், அதில், அவர் ”எனக்கு நடிகை ரியா சக்ரவர்த்தி மூலம் சுஷாந்த்தை தெரியும். இரண்முறை மட்டுமே அவரைச் சந்தித்துள்ளேன். ரியாவை எனது ’ஜிலேபி’ படத்தில் அறிமுகப்படுத்தினேன். அதனால், என்னை குருவாகப் பார்க்கிறார்” என்று விசாரணையில் கூறியிருக்கிறார். சுஷாந்த் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக இதுவரை 38 பேர் விசாரிக்கப்பட்டுள்ளார்கள்.