தன் மீதான பாலியல் குற்றச்சாட்டை நடிகர் விநாயகன் ஒப்புக்கொண்டதாக, அவர் மீதான குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
பிரபல மலையாள நடிகர் விநாயகன். வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் இவர், தமிழில் விஷாலின் ‘திமிரு’, சிம்புவின் ’சிலம்பாட்டம்’, தனுஷின் ‘மரியான்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர், பாஜகவுக்கு எதிரான கருத்தைக் கூறியதால் சர்ச்சையில் சிக்கினார். இதனால், சமூக வலைத்தளங்களில் சாதி மற்றும் நிறம் தொடர்பானத் தாக்குதலுக்கு உள்ளானார்.
இந்நிலையில் அவர் மீது, கேரளாவைச் சேர்ந்த சமூக ஆர்வலரும் மாடலுமான மிருதுளா தேவி, மீ டூ புகார் கூறியிருந்தார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள அவரை அழைத்த போது, ஆபாசமாகப் பேசியதாக விநாயகன் மீது புகார் சொன்னார். தன்னை மட்டுமல்லாது தன் தாயையும் அவர் விரும்பும்படி நடந்துகொள்ள வேண்டும் என்று கூறியதாக, விநாயகன் மீது கல்பட்டா காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார். இதையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து ஜாமினில் விடுவித்தனர்.
இந்நிலையில் அவர் மீது கல்பட்டா நீதிமன்றத்தில் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் தனது குற்றத்தை நடிகர் விநாயகன் ஒப்புக்கொண்டதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை கல்பட்டா நீதிமன்றத்தில் அடுத்த மாதம் முதல் நடக்க இருக்கிறது.