‘விஸ்வாசம் தூக்குதுரை’யை பாராட்டிய காவல் துணை ஆணையர்
‘விஸ்வாசம்’ படத்தில் மகளின் உயிரைக் காப்பாற்ற செல்லும் அவசரத்தில் கூட அஜித் சீட் பெல்ட் அணிந்து செல்வதை சென்னைக் காவல் துணை ஆணையர் பாராட்டியுள்ளார்.
‘விஸ்வாசம்’படம் தொடர்பாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள காவல் துணை ஆணையர் சரவணன், “சமீபத்தில் வெளியான நடிகர் அஜித்குமார் ‘விஸ்வாசம்’ படத்தினை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. படத்தில் கதை, பாடல், நடிப்பு, சண்டைக் காட்சிகள் என ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒன்று பிடித்திருந்தாலும், எனக்கு சில காட்சிகள் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.
படத்தில் கதாநாயகன், கதாநாயகி இருவரும் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது கட்டாயமாக ஹெல்மட் அணிந்து செல்வது, கதாநாயகன் கார் ஒட்டும் போதெல்லாம் சீட் பெல்ட் அணிந்து கார் ஓட்டுவது, தனது மகளின் உயிரைக் காப்பாற்ற செல்லும் அவசரத்தில் கூட சீட் பெல்ட் அணிந்து செல்வது, பெற்றோர்கள் தங்கள் கனவுகளை குழந்தைகள் மேல் திணிக்காமல், அவர்கள் கனவுகளை எட்ட துணை நிற்க வேண்டுவது”என இப்படி பல காட்சிகள் பிடித்திருந்தன.
இந்தியாவில் சாலை விபத்துகளில் அதிகம் பேர் உயிரிழக்கும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. பல லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்ட அஜித்குமார் போன்ற நடிகர்கள் போக்குவரத்து விதிகளை பின்பற்றி நடிக்கும் போது அவரது ரசிகர்களும் பின்பற்ற வேண்டும் என்பதே எனது அவா. ‘விஸ்வாசம்’ படத்தின் கதாநாயகன் அஜித்குமார், இயக்குநர் சிவா மற்றும் அவரது குழுவினருக்கு பாராட்டுகள்” எனத் தெரிவித்துள்ளார்.